டெல்லி: ஒடிஷா மாநிலத்தின் 4,000 மெகாவாட் அல்ட்ரா மெகா மின் திட்டத்தை (UMPP) கைப்பற்ற, ஜிண்டால் ஸ்டீல் அண்ட் பவர் லிமிடெட்(JSPL), டாடா பவர் மற்றும் என்டிபிஸி உள்ளிட்ட ஒன்பது நிறுவனங்கள் தங்கள் தொடக்க ஏல விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளன.
ஒடிஷாவின் பேடாபஹாலில் அமையவுள்ள இத்திட்டத்திற்குத் தகுதி கோரும் விண்ணப்பங்களை (RFQ) அனுப்பக் கடைசி தேதி நவம்பர் 25. அதே போல தமிழ்நாட்டில் செய்யூரில் அமையவுள்ள மின் திட்டத்திற்கு தகுதி கோரும் விண்ணப்பங்களை (RFQ)அனுப்பக் கடைசி தேதி, நவம்பர் 28 என்று இரு மத்திய அரசு அறிவித்திருந்தது.
'அது என்னப்பா தகுதி கோரும் விண்ணப்பம்?'
பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஒரு பெரிய திட்டத்திற்கு, அதைச் செய்ய விரும்பும் நிறுவனங்கள் தகுதி, திறமை, முன் அனுபவம் பெற்றுள்ளனவா என்று ஆய்வு செய்வது. இதில் 'பாஸ்மார்க்' வாங்கும் நிறுவனங்களுக்கு மட்டுமே 'ஒப்பந்த ஏலத்தொகை' அனுப்ப அனுமதி வழங்கப்படும்.
ரூ.24,000 கோடி மதிப்பு
ஒவ்வொரு மின் திட்டமும் ரூ.24,000 கோடி மதிப்புள்ளவை. மேலும் இத்திட்டத்தை பிப்ரவரி மாதத்திற்குள் ஒதுக்கீடு செய்யப்படும் என மத்திய அரசு அறிவித்தது.
நிலக்கரி
ஒடிஷா திட்டம் உள்நாட்டில் கிடைக்கும் நிலக்கரியைப் பயன்படுத்தியும் ('என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில்'), தமிழ்நாட்டு திட்டம், இறக்குமதி செய்யப்படும் எரிபொருளைப் பயன்படுத்தியும் ('ஆனாலும் கையேந்துவோம் வெளிநாட்டில்') இயக்கப்படும்.
விதிமுறை விலக்கு
முதலீட்டாளர்களுக்கு நண்பனாக செயல்படுவதாகவும் (நண்பேன்டா!), பெரிய தொழில் திட்டங்களைத் தொடங்கத் தடையாக இருக்கும் விதிமுறைகள் அகற்றப்படும் (நியாயம்தானே பாஸ்! அவங்க கஷ்டப்படலாமா?) என்றும் அரசு தெரிவித்துள்ளது.
திருத்தப்பட்ட ஏல ஆவணங்கள்
உயர்மட்ட அமைச்சர்கள் குழு ஒன்று, திருத்தப்பட்ட ஏல ஆவணங்களை சமர்ப்பிக்க ஒப்புதலை ஆகஸ்ட் மாதத்தில் அளித்துள்ளது. "ஏலத் தொகை கணக்கிடுவதில் எரிபொருள் செலவுக்கு விலக்கு அளிக்கப்பட்டிருப்பதால், இத்திட்டத்தில் தொழில் நிறுவனங்களின் ரிஸ்க் பெருமளவு குறைக்கப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழல்
மேலும், நிலம், நீர் மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பான அனுமதிகள் எளிதில் பெற வழிவகையும் செய்யப்பட்டுள்ளது" என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
பவர் ஸ்டார்
தற்போது மத்திய அரசு, டாடா பவர் நிறுவனத்துக்கு ஒன்றும் ரிலையன்ஸ் பவர் நிறுவனத்திற்கு மூன்றுமாக மொத்தம் நான்கு அல்ட்ரா மெகா பவர் திட்டங்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது (அப்போ, ரிலையன்ஸ் தான் உண்மையிலேயே 'பவர் ஸ்டார்'!).
உலக நாடுகளின் பங்களிப்பு இல்லை
ஆனால் இதுவரையில், டாடா நிறுவனத்தால் அமைக்கப்பட்ட குஜராத்தின் முந்த்ரா மின்திட்டம் மட்டுமே செயல்பாட்டுக்கு வந்துள்ளது. முந்தைய ஒப்பந்த ஏலத்துக்கு சீனா மற்றும் சிங்கப்பூரிலிருந்தும் 7 நிறுவனங்கள் விண்ணப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது.