இனி டெபிட் கார்டு பரிவர்த்தனைகளுக்கும் ஏடிஎம் ரகசிய எண் அவசியம். ரகசிய எண் மூலமே பரிவர்த்தனை செயல்படுத்த முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் டிசம்பர் 1 முதல் அமலுக்கு வந்தது.
இதுவரை பல்வேறு பரிவர்த்தனைகளில் டெபிட் கார்டு பயன்படுத்தப்பட்ட போதும், ஏடிஎம் ரகசிய எண் கோரப்படவில்லை. எனினும் இது போதிய பாதுகாப்பை கொடுத்ததாகத் தெரியவில்லை. இப்பரிவர்தனைகளில் தற்போது அறிமுகம் செய்துள்ள இந்த தேவையானது, மற்றுமொரு அடுக்குப் பாதுகாப்பினை டெபிட் கார்டு பயன்பாட்டில் தருகிறது.
திட்ட செயல்பாடு:
* நீங்கள் டெபிட் கார்டை பயன்படுத்தி எதை வாங்கினாலும் உங்கள் டெபிட் கார்டை ஸ்வைப்பர் இயந்திரத்தில் தேய்க்கப்படும்.
* பின்னர் தேவைப்படும் தொகையை கடைக்காரர் அதில் பதிவு செய்வார்.
* விற்கப்படும் இடத்தில் உள்ள கார்டு தேய்க்கப்படும் இயந்திரம் ரகசிய எண்ணைக் கேட்கும். அதை ஏடிஎம் கார்டு வைத்திருப்பவர் மட்டுமே பதிவு செய்யவேண்டும்.
* அதன் பின் பணப்பரிமாற்றம் நிகழ்ந்து முடிவுறுகிறது.
நினைவில் கொள்ளவேண்டிய முக்கிய குறிப்புகள்:
* கார்டு வைத்திருப்போர், எண்களை பிறரிடம் கொடுத்து பதியச் சொல்லாமல் தாங்களே அதை செய்ய வேண்டும்.
* ரகசிய எண்களை பதியும்போது, அது மறைவாகவும், மற்றவர் பார்க்காத வண்ணமும் இருத்தல் அவசியம்.
* பணம் செலுத்த கார்டை கொடுக்கையில், அது உங்கள் பார்வையில் படும்படி இருக்கட்டும்.
* மேலும் கொடுத்த கார்டை திரும்பப் பெற்றுக்கொள்ள மறந்துவிடாதீர்கள்