சிட்னி: இந்தியாவின் இரண்டாவது பெரிய மென்பொருள் ஏற்றுமதி நிறுவனமான இன்ஃபோசிஸ் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் ஒரு புதிய கிளை அலுவலகத்தை திறந்துள்ளது. இதில் புதிதாக 85 பணியாளர்கள் பணியமர்த்தப்படவுள்ளனர் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. செலவுகளை குறைக்க அதன் வெளிநாட்டு பணியாளர்களை குறைக்க திட்டமிட்டுக்கொண்டு இருக்கும் வேளையில் சிட்னியில் புதிய கிளை திறக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.
நியூ சவுத்வேல்ஸ் பகுதியில் கடந்த ஐந்து ஆண்டுகளாக அந்நிறுவனம் பெற்று வரும் 500 சதவிதத்திற்கும் மேலான வளர்ச்சியை கருத்தில் கொண்டு, ஒரு புதிய கிளை அலுவலகம் சிட்னியில் திறக்கப்பட்டுள்ளது என இன்போசிஸ் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
85 புது ஊழியர்கள்
அதிகரித்து வரும் வாடிக்கையாளர் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு, வரும் நிதி ஆண்டில் நியூ சவுத்வேல்ஸ் பகுதியில் மட்டும் 85 புதிய தொழிலாளர்கள் வேலைக்கு அமர்த்தப்படலாம் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆஸ்திரேலியா, நியூசிலாந்து
ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து பகுதியில் மட்டும் தற்போது 2,600 பேர் இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் பணிபுரிகின்றனர்.
ஆஸ்திரேலியா சந்தை
"இன்ஃபோசிஸ் நிறுவனத்திற்கு உலகளவில் ஆஸ்திரேலியா மூன்றாவது பெரிய சந்தையாகும், இப்பகுதியில் எமது நிறுவனம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. இந்த பிராந்தியம் முழுவதும் ஆரோக்கியமான வளர்ச்சி காணப்படுகிறது. குறிப்பாக நியூ சவுத்வேல்ஸ் பகுதியில், நிதிச் சேவைகள் மற்றும் தகவல்தொடர்பு சார்ந்த வேலைகளில் அதிக பணியமர்த்தல் ஏற்படுகிறது" என இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவர் மற்றும் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து பகுதியின் தலைமை நிர்வாகி ஜாக்கி கொர்ஹோனேன் கூறினார்.
ஊழியர்கள்
140 இருக்கைகள் கொண்ட புதிய அலுவலகத்தில் புதிய உள்ளூர் ஊழியர்கள் மற்றும் குறுகிய கால பணித்திட்டங்களுக்காக வெளிநாடுகளில் இருந்து வரவழைக்கப்படும் நிபுணர்கள் பணியமர்த்தப்படுவர். இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் பெரும்பாலான நியூ சவுத்வேல்ஸ் ஊழியர்கள் சிட்னி பகுதியில் உள்ள வாடிக்கையாளர் பணியிடத்தளங்களில் வேலை செய்வர்.
நிறுவனத்தின் வளர்ச்சி
"எங்களின் சர்வதேச தொழில்முனைப்பில் இந்தியாவின் முன்னுரிமையை சிட்னி பகுதியில் ஏற்படும் வளர்ச்சி உறுதிப்படுத்துகிறது. இன்ஃபோசிஸ் போன்ற நிறுவனங்களின் முதலீடு மற்றும் கூட்டாண்மையின் மூலமாக ஆஸ்திரேலிய நிறுவனங்களின் அறிவுப் பொருளாதாரம் வளருவதால், உலகச் சந்தையில் எங்களது நிறுவனங்களின் போட்டித்தன்மை அதிகரிப்பு முடுக்கிவிடப்பட்டுள்ளது" என நியூ சவுத்வேல்ஸ் பிரீமியர் பேரி ஓ'பார்ரேல் தெரிவித்தார்.
ஆட்குறைப்பு திட்டம்
நிறுவனத்தின் செயல்பாட்டு செலவுகளை குறைக்கும் முயற்சியாக வெளிநாடுகளில் உள்ள உயர் அதிகாரிகள் மற்றும் துணை ஒப்பந்தக்காரர்களின் எண்ணிக்கையை குறைக்கும் வழிமுறைகளை மேற்கொண்டுள்ளோம் என அண்மையில் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் தலைவர் நாராயண மூர்த்தி பார்க்லேஸ் ஆய்வாளர்கள் மத்தியில் கூறினார். இதனால் வெளிநாடுகளில், இந்தியாவில் வேலை பார்க்கும் இன்போசிஸ் ஊழியர்கள் கடும் பீதியில் உள்ளனர்.