மும்பை: அமெரிக்கவின் முன்னணி நிறுவனங்களில் ஆப்பிள் நிறுவனமும் ஒன்று. இந்நிறுவனத்தின் தயாரிப்புகளான ஆப்பிள் கம்ப்யூட்டர், லேப்டாப், ஐ- பேட், ஐ-பாட்கள் மற்றும் ஐ-போன்கள் ஆகியவை தரத்திற்கும், வடிவமைப்பிற்கும், செயல்திறனுக்கும் பெயர்பெற்றவை. ஆப்பிளின் தயாரிப்புகளைக் கையில் வைத்திருப்பதையே ஒரு கௌரவ அடையாளமாக நினைக்கும் பலர் உலகெங்கும் உள்ளனர். (இதில் நானும் ஒருவன்..)
ஆப்பிளின் 5-வது ஜெனரேஷன் டேப்லட்டான புத்தம் புதிய ஐ-பேட் ஏர் இந்த டிசம்பர் 7-ம் தேதிமுதல் இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது. இந்தியாவில் ஆப்பிள் தயாரிப்புகளை விற்பனைக்கு விநியோகம் செய்து வரும், அதன் அங்கீகாரம் பெற்ற விற்பனையாளர்களான இன்கிராம் மைக்ரோ மற்றும் ரெடிங்டன் இந்தியா நிறுவனங்கள் இந்த ஐபேட் ஏர்-ஐ விற்பனை செய்யவுள்ளன. இதில் இன்கிராம் மைக்ரோ, பெருநிறுவனங்களுக்கும், ரெடிங்டன், சிறு வியாபாரிகளுக்கும் விற்பனை செய்வார்கள்.
ஐ-பேட் ஏர் சில்வர் மற்றும் ஸ்பேஸ் கிரே நிறங்களில் கிடைக்கும் 16 ஜிபி கொண்ட ஐபேட் ஏர் (வை-ஃபை மாடல்) ரூ.35,900 என்றும் 16 ஜிபி ஐபேட் மினி (வை-ஃபை) ரூ.28,900 என்றும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக இன்கிராம் மைக்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் இதன் விற்பனை இந்தியாவில் டிசம்பர் 7 ஆம் நாள் துவங்கும் என அந்நிறவனம் தெரிவிக்கிறது.
அமெரிக்காவில் நவம்பர் 1-ம் தேதியன்று வெளியிடப்பட்ட ஆப்பிள் குடும்பத்தின் புதுவரவான ஐபேட் ஏர், ஆப்பிள் நிறுவனத்தின் ஒர் அதிநவீன தயாரிப்பாகும். அதனுடைய 4-வது ஜெனரேஷன் ஐ-பேடை விட 20% மெல்லியதாகவும் 28% எடை குறைந்ததாகவும் (453 கிராம்) உள்ள ஐபேட் ஏர், 9.7 இன்ச் அளவுள்ள மிகத் துல்லியமான ரெட்டினா டிஸ்ப்ளேவையும் (ஆப்பிளின் கண்டுபிடிப்பு.. உண்மையிலே சூப்பரா இருக்கும்) கொண்டுள்ளதால் ஆப்பிள் விரும்பிகளிடம் இது அமோக ஆதரவைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.