மும்பை: ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் அதன் உரிமையாளர்களில் ஒருவரான கலாநிதி மாறனுக்கு ஒன்றரை கோடி பங்குகளை அதற்கு சமமான பங்கு உத்திரவாதங்களை அவருக்கு ஒதுக்கியது. இது பற்றி விளக்குகையில், ஒதுக்கப்பட்ட ஒரு பங்கின் விலை ருபாய் 36.18 என்றும் இதற்காக செலுத்தப்பட்ட மொத்தத் தொகை சுமார் 54.27 கோடி ருபாய் என்றும் தெரிவித்தது.
மேலும் சன் குழுமத்தின் நிதி நிர்வாகி திரு எஸ்.எல் நாராயணன் கூறுகையில், தற்போது நடைபெற்றுள்ள இந்த பரிமாற்றம் ஏற்கனவே கடந்த ஜனவரி 9 ஆம் தேதி ஒதுக்கப்பட்டிருந்த பங்கு உத்திரவாதங்களுக்கான விதிமுறைகள் படி நடந்ததாகத் தெரிவித்தார். இதன் மூலம் கிடைக்கும் வருவாய், விதிமுறைகளின் படி நிறுவன பணி முதல் தேவைகளுக்குப் பயன்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த ஒதுக்கீடிற்குப்பின், உரிமையாளர்களின் பங்கானது 53.48 விழுக்காடாக உயர்ந்து, அதில் கலாநிதி மாறனின் பங்கு 24.24 விழுக்காடாகவும் மீதம் கேஏஎல் ஏர்வேஸ் இன் வசமும் உள்ளது.
இதற்கு முன் உரிமையாளர்கள், 2011-12, 2012-13 மற்றும் 2013-14 ஆண்டுகளில் பங்கு முதலாக முறையே 130.92 கோடி, 99.44 கோடி மற்றும் 130 கோடி அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, நிறுவனத்தின் புதிய விமானங்கள் வாங்கும் திட்டங்கள் குறித்த கேள்விக்கு, தற்போது புதிதாக விமானங்கள் வாங்கும் திட்டத்தை தள்ளிவைத்துள்ளோம் என திரு நாராயணன் தெரிவித்தார்.