மும்பை: வீட்டு வசதி மற்றும் கட்டுமானத் துறையில் அழுத்தம் கூடிக்கொண்டே போகிறது. இதற்குச் சான்றாக, எல்ஐசி வீட்டுவசதி நிதி நிறுவனம் மும்பையில் கடனைத் திருப்பிச் செலுத்த தவறிய கட்டுமான விரிவாக்க நிறுவனமான ஆர்பிட் கார்போரேஷனுக்குச் சொந்தமான சொத்தை கைப்பற்றியது.
ஆர்பிட் நிறுவனத்தின் மொத்த கடன் நிலுவை செலவுகள் மற்றும் வட்டியைச் சேர்த்து ரூபாய் 95.50 கோடி என ஒரு பொது அறிவிப்பில் எல்ஐசி தெரிவித்துள்ளது.
மும்பை அந்தேரியிலுள்ள ஆர்பிட் ரெசிடென்சி பார்க் என அழைக்கப்படும் அடுக்குமாடித் திட்டத்தில் சுமார் 155 வீடுகளைத் தவிர அனைத்தையும் எல்ஐசி கையகப்படுத்தியுள்ளது. ஆர்பிட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் புசித் அகர்வால் மற்றும் தலைவர் ரவிகிரன் அகர்வால் ஆகியோர் இந்த கடனிற்கு உத்தரவாதமிட்டுள்ளனர்.
ஆர்பிட் நிறுவனத்தின் பிரதிநிதியை சந்தித்து இதுகுறித்துக் கேட்டபோது, "இந்த சொத்தில் 150 குடியிருப்புகள் குடியேறும் நிலையில் இல்லை. எனவே 80 விழுக்காடு சொத்து காலியாக உள்ளது. மேலும் நாங்கள் இதுகுறித்த பேச்சு வார்த்தைகளிலும் சமரசங்களிலும் ஈடுபட்டுள்ளோம். காலம் கடந்ததால் அவர்கள் நடவடிக்கை எடுத்துள்ளார்கள். நாங்களும் எங்கள் உரிமைகளை பாதுகாத்துக் கொள்ளும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளோம்" என்று தெரிவித்தார்.
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ரூபாய் 96 கோடி பெறுமானமுள்ள கடன் மற்றும் வட்டி உள்ளிட்ட தொகையை ஆர்பிட் நிறுவனம் செலுத்தத்தவறியது என்றும், அதனால் அந்த கடனை வராக்கடன் கணக்காக அறிவித்துவிட்டதாகவும் எல்ஐசி தெரிவித்தது.
இந்த வருடம் கட்டுமான நிறுவனங்கள் பலர் வீடுகள் விற்பனை குறைவால் பாதிக்கப்பட்டு, அதன் விளைவாக கடனை திருப்பிச்செலுத்த முடியாமல் திணறியுள்ளனர்.
இந்த ஆண்டின் துவக்கத்தில், நிதி நிலை மதிப்பீடு நிறுவனமான ப்ரிக்வொர்க், மும்பையை சேர்ந்த ஹப்டவுன் நிறுவனத்தை, ரூபாய் 100 கோடி மதிப்பிலான மாற்ற இயலாத கடன்பத்திரங்களின் மீதான முதல் மற்றும் வட்டியை திரும்ப செலுத்தாததால் தரக்குறைப்பு செய்தது.
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இன்டியாபுல்ஸ் வீட்டுக்கடன் நிறுவனம், ராகேஷ்குமார் வதவான் மற்றும் சாரங் வதவான் ஆகிய கட்டுமான தொழிலதிபர்களின் நிறுவனமான எச்டிஐஎல் நிறுவனத்தை கடன் செலுத்தாதவர்களாக அறிவித்தது.