மும்பை: முன்னணி கார் தயாரிப்பாளர்களான மாருதி மற்றும் ஹூண்டாய் நிறுவனங்கள் விலைகளை உயர்த்தப்போவதாக அறிவித்ததைத் தொடர்ந்து வரும் ஜனவரி மாதம் முதல் கார்கள் விலை உயரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
"உற்பத்திச் செலவுகள் தொடர்ந்து உயர்ந்து வருவதால், அவற்றை உள்வாங்கிகொள்ள இயலாத நிலையில், அவற்றை விலைகளின் மூலம் வாடிக்கையாளர்களிடம் பெறுவதைத் தவிர வேறு வழி இல்லை. ஆகவே, மாருதி சுசுகி வரும் 2014 ஜனவரி மாதம் முதல் விலைகளை உயர்த்தும்" என்று அந்நிறுவனத்தின் சந்தை மற்றும் விற்பனை பணிகள் அதிகாரி மயானக் பாரேக் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.
ஹூண்டாய் மோட்டார்ஸ் இந்தியா நிறுவனமும் உற்பத்திச் செலவுகளை ஈடு செய்ய இதே போன்று விலை உயர்வு நடவடிக்கைகளை அடுத்த மாதத்தில் மேற்கொள்ளவுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
ஹூண்டாய் நிறுவனம்
"சந்தை சூழ்நிலைகளையும் உயர்ந்துவரும் உற்பத்திச் செலவுகளையும் கருத்தில் கொண்டு வரும் ஜனவரி முதல் விலைகளை உயர்த்த இருக்கிறோம்" என்று ஹூண்டாய் நிறுவனத்தின் சந்தை மற்றும் விற்பனைத் துறையின் உபதலைவர் திரு ராகேஷ் ஸ்ரீவாஸ்தவா தெரிவித்தார்.
உதிரி பாகங்கள்
இந்த உயர்வு அனைத்து உற்பத்திப் பொருட்களுக்கும் பொருந்தும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
10% உயர்த்தும் பென்ஸ்
முன்னதாக ஜெர்மனியின் சொகுசு கார் தயாரிப்பாளரான மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனமும் இந்தியாவில் தன்னுடைய தயாரிப்புகளுக்கான விலையை 10 விழுக்காடு வரை அடுத்த மாதம் உயர்த்தவுள்ளதாக தெரிவித்துள்ளது.
பிஎம்டபிள்யூ மற்றும் ஆடி நிறுவனமும்
அந்நிறுவனம் விலை உயர்வுக்கான காரணத்தை தெரிவிக்கவில்லை என்றாலும் அதன் போட்டியாளர்களான பிஎம்டபிள்யூ மற்றும் ஆடி நிறுவனங்கள் பொருளாதார காரணங்களினால் தங்கள் தொழிலில் ஏற்பட்டுள்ள அழுத்தத்தினால் விலைகளை ஜனவரி முதல் உயர்த்தவுள்ளதாக ஏற்கனவே அறிவித்திருந்தன.