டெல்லி: ஃபின்லாந்தைத் தலைமையிடமாகக் கொண்ட நோக்கியா ஒரு உலகப் புகழ்பெற்ற மொபைல் தயாரிப்பு நிறுவனம். இந்தியாவில் இருக்கும் நோக்கியாவின் உற்பத்தி மையங்கள், சொத்துக்களை மைக்ரோசாப்ட் வாங்க முடிவு செய்தது.
நோக்கியா 2006-07 முதல் இதுவரை ஐந்து ஆண்டுகளுக்கு ரூ.2,080 கோடி வரி பாக்கி வைத்துள்ளது. அது மட்டுமில்லாமல் இன்னும் கணக்கிடப்படாத வரிபாக்கி, அதற்கான வட்டி, அபராதம் போன்றவை எல்லாம் சேர்த்து ரூ.21000 கோடி செலுத்த வேண்டும் என்று வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியதுடன் நோக்கியா நிறுவனம் வரிபாக்கிகளை செலுத்தாமல் அதன் சொத்துக்களை விற்கக் கூடாது என்றும் தெரிவித்தது.
பணியாளர்கள்
8000 பணியாளர்களும் 30000 துணை-ஒப்பந்ததாரர்களும் பணியாற்றிவரும் நோக்கியா நிறுவனத்தின் மிகப் பெரிய உற்பத்தி மையமான அதன் சென்னை யூனிட்டை வருமான வரித்துறை கைப்பற்றியது(வெச்சுட்டாங்கடா ஆப்பு...) இதனால் அதிர்ச்சியடைந்த நோக்கியா நிறுவனம் சென்னை யூனிட்டை திரும்ப ஒப்படைக்கக் கோரியும், அதை மைக்ரோசாப்டுக்கு விற்க அனுமதி வேண்டியும் டெல்லி ஹைகோர்ட்டை அணுகியது. வரி பாக்கி வைத்துள்ள நிறுவனங்களின் பட்டியலில் ஐபிஎம், ராயல் டட்ச் ஷெல், வோடஃபோன், எல்ஜி ஆகியவையும் அடக்கம்.
தொழிலாளர்கள் கலக்கம்
நோக்கியாவில் பணிபுரிந்து வந்த தொழிலாளர்கள், தங்கள் நிறுவனத்துக்கு ஏற்பட்ட இந்த நிலையால் கலங்கிப் போனார்கள். தங்களின் எதிர்காலம் கேள்விக் குறியானதால் அவர்களும் நோக்கியா சார்பாக மனு ஒன்றை டெல்லி ஹைகோர்ட்டில் பதிவு செய்துள்ளனர். 7 பில்லியன் டாலருக்கு (42,500 கோடி)மைக்ரோசாஃப்டுக்கு சென்னை யூனிட்டை விற்கும் இந்த முடிவின் மூலம் தங்கள் வேலைவாய்ப்பு உறுதி செய்யப்படும், தாங்கள் மைக்ரோசாஃப்ட் நிர்வாகத்தின் கீழ் வருவோம் என்ற அவர்களின் எதிர்பார்ப்பில் மண் விழுந்தது வருத்தத்துக்குரிய விஷயம்.
ஹைகோர்ட் அனுமதி
இந்த வழக்கை விசாரித்த டெல்லி ஹைகோர்ட், ரூ.2250 கோடியை இப்போது ஒரு வங்கிக் கணகில் இடைக்கால வைப்பு நிதியாக செலுத்திவிட்டு தன்னுடைய சொத்துக்களை மைக்ரோசாஃப்டுக்கு விற்க அனுமதியளித்துள்ளது. வரிபாக்கி குறித்த வழக்கு தனியாக நடைபெறும் என்றும் வருமான வரித்துறை, தங்கள் வழக்கை மறுபடியும் தாக்கல் செய்து நடத்தலாம் என்றும் தெரிவித்துள்ளது. ஒருவழியாக, தங்களின் வேலைவாய்ப்பு மீண்டும் உறுதி செய்யப்பட்டதை அடுத்து நோக்கியாவின் தொழிலாளர்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.