மும்பை: ஜெட் ஏர்வேஸ் பங்குகள் பெரும் வர்த்தகப் பின்னடைவால் கடந்த 21 மாதங்களில் இல்லாத அளவிற்கு சுமார் 8 சதவிகிதம் சரிந்து, ரூபாய் 270க்கு குறைந்து மும்பை பங்குசந்தையில் விற்கப்பட்டது. கடந்த இரு வாரங்களாக, தினமும் சுமார் 10 லட்சத்திற்கும் குறைவான பங்குகள் வர்த்தகமாகும் நிலையில், வெள்ளிகிழமை 12 மணிக்கு பிற்கு சுமார் 23.5 லட்சம் பங்குகள் கைமாறியிருப்பதாகத் தெரிகிறது.
பிடிஐ செய்திகளின் படி நேர்மையான பங்கு வர்த்தகங்களை கண்காணிக்கும் அமைப்பான வர்த்தகப் போட்டிகள் ஆணையம் (CCI) இதுகுறித்து ஜெட் ஏர்வேஸ் மற்றும் எதிஹாட் ஏர்வேஸ் ஆகிய நிறுவனங்களிடம் வர்த்தகப் போட்டிகளுக்கு எதிரான அம்சங்கள் ஏதேனும் உள்ளனவா என விளக்கம் கேட்டுள்ளது.
கடந்த மாதம் இந்த அமைப்பு, அபுதாபி நாட்டின் எதிஹாட் ஏர்வேஸ் நிறுவனம் நரேஷ் கோயலுக்குச் சொந்தமான ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் 24% சதவிகிதப்பங்குகளை ரூபாய் 2,060 கோடிக்கு வாங்குவதற்கான ஒப்பந்தத்தை அனுமதித்திருந்தது.
இதனிடையே, ஏர் இந்தியா நிறுவனத்தின் முன்னாள் செயல் இயக்குனர் ஜிதேந்தர் பார்கவா அந்த அனுமதிக்கு எதிராக வழக்கு தொடர்ந்து, இந்த ஒப்பந்தத்தின் மூலம் எவ்வாறு போட்டிகள் அழிக்கப்படும் என்பதை அந்த அமைப்பு ஆராயத் தவறிவிட்டதாத குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், பாரதிய ஜனதா கட்சியின் மக்களவை உறுப்பினரான சுப்ரமணியன் சுவாமி அபுதாபிக்கு அதிக போக்குவரத்து உரிமங்களை வழங்கியதற்கு எதிராக வழக்கு தொடர்ந்ததோடு, பங்கு சந்தை நிர்வாக அமைப்பான செபியிடம் எதிஹாட் நிறுவனம் ஒரு திறந்த வர்த்தகத்தை அறிவிக்கும் வரை இந்த ஒப்பந்தத்தை செல்லாது என அறிவிக்கவும் கேட்டுக்கொண்டுள்ளதாக பிசினஸ் ஸ்டாண்டர்ட் இதழ் தெரிவித்துள்ளது.