மும்பை: இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, பாங்காக் மற்றும் துபாயில் தனது கிளைகளை திறக்கவிருக்கிறது. இவ்வங்கி தனது விரிவாக்கத் திட்டத்தின் ஒரு பகுதியாக, நடப்பு நிதியாண்டில் சுமார் 400 கிளைகளை துவக்க வேண்டும் என்ற இலக்கை நிர்ணயித்து செயல்பட்டு வருகிறது என்று கடந்த வெள்ளியன்று இவ்வங்கியின் சேர்மனும், நிர்வாக இயக்குனருமான எம்.நரேந்திரா அவர்கள் பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்துள்ளார். தற்சமயம், இவ்வங்கிக்கு சுமார் 3,059 கிளைகள் உள்ளன.
"கிராமப்புறங்களுக்கு வங்கி வசதியை கொண்டு சேர்க்கும் நோக்கில், அதிக அளவிலான கிராமப்புற கிளைகளை துவக்குவதில் நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம். நாங்கள் சுமார் 3,000 கிராமங்களை இந்த நிதி உள்ளீட்டுத் திட்டத்தின் கீழ் கொண்டு வந்துள்ளோம். இந்த எண்ணிக்கையை உயர்த்த இன்னும் ஏராளமான பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இது வரை கிராமப்புறங்களில் அமைக்கப்பட்டுள்ள அனைத்து வங்கிகளின் மூலமாக, நாட்டின் 6 லட்சம் கிராமங்களில் பாதி அளவு கிராமங்கள் மட்டுமே வங்கி சேவைகளைப் பெற்று வருகின்றன. அதனால் மீதமுள்ள கிராமங்களில் வங்கி சேவைகளுக்கான வாய்ப்புகளும், சவால்களும் கொட்டி கிடக்கின்றன," என்று அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில் "தற்போது சுமார் 3,89,000 கோடி ரூபாயாக உள்ள இவ்வங்கியின் வர்த்தகம், நடப்பு நிதியாண்டின் இறுதிக்குள் சுமார் 4 லட்சம் கோடி ரூபாயைத் தாண்டி விடும், ஆனால் நாங்கள் எங்களுக்கான கட்டாய இலக்காக சுமார் 4,25,000 கோடி ரூபாயை நிர்ணயித்துள்ளோம்." என்றும் கூறியுள்ளார். பொருளாதார மந்தநிலை வங்கி செயல்பாடுகளை வெகுவாக பாதித்து வருவதோடு, பணவீக்கமும் கவலை அளிப்பதாக உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
அண்மையில் இவ்வங்கி சுமார் 4,562 ஊழியர்களை பணியமர்த்தியது என்றும் விரிவாக்கத் திட்டங்களைப் பொறுத்து மேலும் 6,500 ஊழியர்கள் பணியில் அமர்த்தப்படுவார்கள் என்றும் திரு.நரேந்திரா தெரிவித்துள்ளார்.
ஆந்திரப் பிரதேசத்தில், சுமார் 240 கிளைகளைக் கொண்டிருக்கும் இவ்வங்கி, நடப்பு நிதியாண்டில் மேலும் 30 கிளைகளைத் திறக்க திட்டமிட்டுள்ளது. "2014-15 ஆண்டின் போது இதே வேகத்தில் செயலாக்கப்படவுள்ள எங்களது விரிவாக்கத்தில், நாடு முழுவதிலும் சுமார் 500 கிளைகளை திறக்கவுள்ளோம், இவற்றுள் 50 கிளைகள் ஆந்திரப்பிரதேசத்தில் அமைக்கப்படவுள்ளன," என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வங்கியின் மொத்த என்பிஏ (Non-performing asset) சுமார் 4.65 சதவீதமாகவும், நிகர என்பிஏ சுமார் 2.83 சதவீதமாகவும் உள்ளது. "மொத்த என்பிஏவை 3 சதவீதத்துக்கும் குறைவாகக் கொண்டு வர வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்," என்றும் அவர் கூறியுள்ளார்.