டெல்லி: சில மாதங்களுக்கு முன்பு தங்க இறக்குமதியை குறைக்க இறக்குமதி செய்யப்படும் தங்கம், வெள்ளி போன்ற உலோகத்திற்கு அதிகப்படியான வரி விதித்தது. அதன் விளைவாக நடப்பு கணக்கு பற்றாக்குறை பெரும் அளவில் குறைந்தது. மேலும் ஏற்றுமதி மற்றும் இறக்குமதிக்கும் உள்ள நெருக்கடி பெரும் அளவில் குறைந்தது.
இதுமட்டும் அல்லாமல் நாட்டின் நிதி அமைச்சர் பி.சிதம்பரம் அவர்கள் மக்களிடம் தங்க வாங்குவதை முற்றிலும் குறைக்க வேண்டினார். மக்களும் இதை ஏற்று பெரும் அளவு தங்கம் வாங்குவதை குறைத்து கொண்டனர்.
இந்த வாரத் துவக்கத்தில் மத்திய அரசு தனது வரி மதிப்பு முடிவை மாற்றிக்க கொண்டது, அதாவது இறக்குமதி செய்யப்படும் தங்கத்தின் வரி மதிப்பை குறைத்து வெள்ளியின் வரி மதிப்பை உயர்த்தியுள்ளது. இதன்படி சர்வதேச விலை நிலைகளுக்கு ஈடாக இறக்குமதி செய்யப்படும் 10 கிராம் தங்கத்த்தின் விலை 398 அமெரிக்க டாலர்களாகவும் வெள்ளியின் விலை கிலோ ஒன்றுக்கு 643 அமெரிக்க டாலர்களாகவும் இருக்கும்.
வரி மாற்றம்!!..
இறக்குமதி செய்யப்படும் தங்கம் அல்லது வெள்ளியின் உண்மையான விலைக்கு குறைவாக மதிப்பீடு செய்வதை தடுக்க மற்றும் சரியான சுங்கவரி விதிக்க இந்த விலை நிர்ணயம் உதவும். இதற்கு முன்பு விலையின் படி தங்கம் 405 அமெரிக்க டாலர்களாகவும் வெள்ளி 642 டாலர்களாகவும் இருந்தது. மத்திய கலால் மற்றும் சுங்க வரித் துறை இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
பித்தளை இறக்குமதி
இதனிடையே விலை உயர்ந்த உலோகங்கள் மட்டுமல்லாது, இறக்குமதி செய்யப்படும் பித்தளை கழிவுகளுக்கான விலையும், டன்னுக்கு 3,906 அமெரிக்க டாலர்களிலிருந்து 3,930 அமெரிக்க டாலர்களாக உயர்த்தப்பட்டுள்ளது.
கசகசா விதைகள்
இதேபோன்று இறக்குமதி செய்யப்படும் கசகசா விதைகள் விலையும் டன்னுக்கு 2781 அமெரிக்க டாலர்களிலிருந்து 3154 டாலர்களாக உயர்த்தப்பட்டுள்ளது.
தங்கம்
தொடர்ந்து இரண்டாவது நாளாக தலைநகரில், தங்க விற்பனையாளர்களின் அதிக விற்பனையால், தங்கத்தின் விலை 340 ரூபாய் குறைந்து 10 கிராம் ரூ.30,700 ரூபாய் என்ற அளவில் இருந்தது.
வெள்ளி
வெள்ளி கட்டிகள் அல்லது பார்கள், காசுகளின் விற்பனை மிதமானதாக உள்ளதால் வெள்ளியின் விலை கிலோவிற்கு ரூ.1,430 வரை குறைந்து காணப்பட்டது.
இந்தியா
உலகிலேயே மிகப்பெரும் தங்க இறக்குமதி செய்யும் நாடான இந்தியா, நடப்பாண்டின் ஏப்ரல் முதல் செப்டம்பர் மாத காலத்தில் சுமார் 393.68 டன்கள் மஞ்சள் உலோகத்தை (தங்கத்தை) இறக்குமதி செய்துள்ளதாக அதிகாரபூர்வ விவரங்கள் தெரிவிக்கின்றன.