மும்பை: சிங்கப்பூரின் மிகப் பெரிய பட்ஜெட் விமான சேவை நிறுவனமான டைகர் ஏர் நிறுவனத்துடன் மூன்று வருட இணைப்பு சேவை ஒப்பந்தத்தில் ஸ்பைஸ் ஜெட் கையெழுத்திட்டது. இதனால் மும்பை பங்குச் சந்தையில் ஸ்பைஸ் ஜெட்டின் பங்குகள் இந்த வார துவக்கம் முதல் 12 சதவீதம் அதிகரித்து ரூ.16.75 ஆக உயர்ந்ததுள்ளது.
இந்தியாவில் செயல்படும் குறைந்த கட்டண விமான சேவை நிறுவனங்களில் ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் மட்டுமே, ஒரு வெளிநாட்டு விமான நிறுவனத்துடன் இது போன்ற இணைப்புச் சேவை ஒப்பந்தத்தில் ஈடுபடும் முதல் நிறுவனமாகும். இந்தக் கூட்டணியின் இணைப்பு சேவையின் மூலம் இரு நாடுகளின் சுற்றுலா மற்றும் வியாபாரம் பெருமளவு அதிகரிக்கும் என்று ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி சஞ்சீவ் கபூர் பேசும்போது, "குறைந்த கட்டணத்தில் விமான சேவையை சாத்தியமாக்கிய, ஆசியாவிலேயே மிகப் பெரிய இரண்டு நிறுவனங்களின் இந்த இணைப்புச் சேவையை அறிமுகப்படுத்துவதில் பெருமைப்படுகிறோம். ஸ்பைஸ் ஜெட் மற்றும் டைகர் ஏர் நிறுவனங்களின் வரலாற்றில் இது ஒரு முக்கியமான தருணம். இந்தியா மற்றும் சிங்கப்பூருக்கு இடையே பயணம் செய்யும் பயணிகளுக்கு இது ஒரு லாபகரமான சேவையாக இருக்கும். ஸ்பைஸ் ஜெட்டின் வளர்ச்சிப்பாதையில் இது ஒரு மைல்கல்" என்று தெரிவித்தார்.
ஜனவரி 6, 2014 முதல் ஸ்பைஸ் ஜெட்டின் உள்நாட்டு விமான சேவை மூலம் இந்தியாவின் 14 நகரங்களிலிருந்து சிங்கப்பூருக்குப் பயணிப்பவர்கள், ஹைதராபாத்தின் ராஜீவ்காந்தி விமான நிலையத்தின் வழியாக டைகர் ஏரின், சிங்கப்பூர் செல்லும் விமானங்களில் தடையின்றிச் செல்ல முடியும்.
அதே போல, ஜனவரி 12, 2014 முதல் சிங்கப்பூரிலிருந்து இந்தியாவுக்கு வரும் டைகர் ஏரின் வாடிக்கையாளர்கள், இந்தியாவுக்குள் தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு, இந்தியாவின் மிகப் பெரிய உள்நாட்டுச் சேவையான ஸ்பைஸ் ஜெட்டைப் பயன்படுத்தி, மிகச் சௌகரியமாக தங்களின் சுற்றுலா மற்றும் வியாபாரப் பயணங்களை மேற்கொள்ளலாம்.