நிதி அமைச்சகம் புதிதாக கவனம் செலுத்த ஆரம்பித்துள்ள சேவை வரி, இப்போது மத்திய அரசுக்கு வருவாய் குவிக்கும் புதிய துறையாக மாறியுள்ளது. மேலும் சேவை வரியின் மூலம் கிடைக்கும் வருவாய் சுமார் 300 மடங்கு வரை உயர்ந்துள்ள தகவலும் தெரியவந்துள்ளது.
1994-95 ஆம் ஆண்டில் ரூபாய் 407 கோடியை சேவை வரியாக ஈட்டிய நிதி அமைச்சகம், 2012-13 ஆம் ஆண்டில் ஏறக்குறைய 1.32 லட்சம் கோடி ரூபாயை வருவாயாக ஈட்டியுள்ளது என அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
2012-13 ஆம் ஆண்டிற்கான சேவை வரி வசூல் இலக்கு 1,32,697 கோடியாக இருந்தது, வசூலானது 1,32,518 கோடி.
வரி செலுத்துவோரின் எண்ணிக்கையும், 1994-95 ஆம் ஆண்டை ஒப்பிடும்போது 400 மடங்கு உயர்ந்துள்ளது. அறிமுகப்படுத்தப்பட்ட 1994-95 இல் 3,943 ஆக இருந்த வரி செலுத்துவோரின் எண்ணிக்கை 2012-13 ஆம் ஆண்டில் 17.12 லட்சமாக பதிவாகியுள்ளது.
சேவை வரிக்கு உட்படுத்தப்படும் சேவைகளின் எண்ணிக்கை பெருக்கத்தாலும், சேவை வரி செலுத்துவோரின் எண்ணிக்கை உயர்வாலும், சேவை வரி வருவாயானது பெரும் வளர்ச்சியை சமீபத்திய வருடங்களில் எட்டியுள்ளது.
சேவை வரி விதிக்கப்படும் சேவைகளின் எண்ணிக்கையானது 1994 ஆம் ஆண்டில் 3-லிருந்து 2012 ஆம் ஆண்டில் 119ஆக உயர்ந்துள்ளது. இந்திய நிதிச் சட்டம் பிரிவு 66D-இன் கீழ் வரும் ஏறக்குறைய அணைத்து சேவைகளுக்கும் வரி விதிக்க அனுமதி தரும் "எதிர்மறை பட்டியல்" அடிப்படையில், அரசு கடந்த ஆண்டு ஜூலை 1ஆம் தேதி முதல் சேவைவரி விதிப்பை அறிமுகப்படுத்தியது.
இதுவரை இல்லாத புதிய முறையாக வரி செலுத்தத் தவறுவோரை மன்னிக்கும் திட்டந்தினையும் நிதி அமைச்சகம் அறிமுகப்படுத்தியுள்ளது. விருப்ப விதிமுறைகள் பின்பற்றல் ஊக்குவிப்புத் திட்டம் (VCES) எனப்படும் இத்திட்டம் இந்த ஆண்டு நிதி மசோதாவின் மூலம் கடந்த மே மாதம் 10 ஆம் தேதி அமல்படுத்தப்பட்டு, அதன் மூலம் வரி செலுத்தாதோர் எந்த வித அபராதத் தொகையும் இன்றி நிலுவைகளை செலுத்த வகை செய்கிறது.
இந்த திட்டத்தின் மூலம் ஒரு நபர் தொடர்புள்ள அதிகாரியிடம் 2013 டிசம்பர் 31ஆம் தேதிக்குள் எழுத்து மூலமாக விவரங்களைத் தெரிவிக்கவேண்டும்.
நிதி அமைச்சகம் 2013-14 ஆம் ஆண்டிற்கான மறைமுக வரி வசூல் இலக்காக ருபாய் 5.65 லட்சம் கோடியை சுங்கம், கலால் மற்றும் சேவை வரிகள் மூலம் பெற நிர்ணயித்துள்ளது. இது கடந்த ஆண்டின் வருவாயான ருபாய் 4.73 லட்சம் கோடியை விட அதிகம்.