மும்பை: ஜெட் ஏர்வேஸ் (இந்தியா) லிமிட்டெட், மிக பெரிய விமானமான ஏர்பஸ் 330-200 ஜெட்களை குத்தகைக்கு விடும் பொருட்டு டர்க்கிஷ் ஏர்லைன்ஸுடன் ஒரு புதிய விமான குத்தகை ஏற்பாட்டிற்கு ஒப்புக்கொண்டுள்ளது.
சுமார் 24 சதவீதம் எடிஹாட் ஏர்வேஸ் நிறுவனத்தின் வசமிருக்கக்கூடிய இந்த இந்திய நிறுவனம், தற்போது இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் அதன் ஏ300 விமானங்களுள் மூன்றை டர்க்கிஷ் விமான நிறுவனத்துக்கு சுமார் ஆறு வருட கால குத்தகைக்கு விடவிருப்பதாக ஆதாரங்கள் கூறுகின்றன.
ஜெட் ஏர்வேஸ் நிறுவன பிரதிநிதிகள் எவரும் இத்தகவலைப் பற்றி விமர்சிக்க முன்வரவில்லை. இதற்கான நிதி தொடர்பான தகவல்களையும் அறிந்து கொள்ள இயலவில்லை.
இரண்டாம் காலாண்டின் இறுதியில், ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் சுமார் ஐந்து ஏ330 விமானங்களை தரையிறக்கியிருப்பதாகவும், நேரடி விற்பனை மற்றும் நீண்ட-கால குத்தகை ஏற்பாடு ஆகிய இரு வகை வர்த்தகங்கள் பற்றிய விவாதங்களை அதில் ஆர்வமுடையவர்களுடன் நடத்துவதற்கு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டதாகவும் கூறியுள்ளது.
இவ்விமானங்களின் நேரடி விற்பனையை இந்நிறுவனம் வெற்றிகரமாக செயல்படுத்தும் பட்சத்தில், அதன் கடன் சுமையில் சுமார் 200 மில்லியன் டாலர் குறையும் என இவ்விமான நிறுவனத்தின் தலைமை நிதித்துறை அதிகாரியான ரவிஷங்கர் கோபாலகிருஷ்ணன் அப்போது தெரிவித்திருந்தார். 2013 ஆம் ஆண்டு செப்டம்பர் 30 ஆம் தேதி நிலவரப்படி, நாட்டின் இரண்டாவது பெரிய விமான நிறுவனமான இதன் கடன் தொகை சுமார் 1.9 பில்லியன் ஆக இருந்துள்ளது.
இந்திய நிறுவனங்கள், இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் தங்களின் விமானங்களை குத்தகைக்கு விடுவதன் மூலம், மலை போல் சேர்ந்து கொண்டிருக்கும் தங்களின் இழப்புகளை ஈடு செய்ய மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றன. இரண்டாம் காலாண்டில், ஜெட் ஏர்வேஸ் சுமார் 891 கோடி ரூபாய் நிகர இழப்பு ஏற்பட்டுள்ளதாக கணக்கு காட்டியுள்ளது. இதில், சுமார் 123 கோடி ரூபாய் வரையிலான இழப்பு, விமானங்களை இயக்காமல் நிறுத்தி வைத்ததனால் ஏற்பட்டதாகும்.
இதற்கு முன், ஜெட் ஏர்வேஸ் இந்த ஐந்து விமானங்களையும் குவைத் ஏர்லைன்ஸிடம் குத்தகைக்கு விட எத்தனித்த நிலையில், அவ்விமான நிறுவனத்தின் சேர்மனாகிய சமி அல்-நெஸிஃப் -ஐ குவைத் அரசாங்கம் பணியிடை நீக்கம் செய்ததனால் இந்த ஒப்பந்தம் கைகூடவில்லை.
டர்க்கிஷ் ஏர்லைன்ஸ் மற்றும் ஜெட் ஏர்வேஸ் ஆகிய இரு நிறுவனங்களும் பன்னெடுங்காலமாக தம்மிடையே வர்த்தக ஏற்பாடுகளை வெற்றிகரமாக செயல்படுத்தி வரும் சிறப்புடையவை. இவ்விரு நிறுவனங்களும் 2008 ஆம் ஆண்டிலிருந்து குத்தகை பங்குதாரர்களாக செயல்பட்டு வருவதாக செய்தி அறிக்கைகள் குறிப்பிடுகின்றன. 2010 ஆம் ஆண்டில், டர்க்கிஷ் ஏர்லைன்ஸ் மூன்று போயிங் 777 வகை விமானங்களை குத்தகைக்கு எடுத்துக் கொள்ளும் பொருட்டு ஜெட் நிறுவனத்துடன் ஒரு ஒப்பந்தத்தை கையெழுத்திட்டது.
சமீபத்தில், ஏர் இந்தியா அதன் போயிங் 787 ட்ரீம்லைனர் ஜெட்களை விற்பதற்கான ஏலத்திற்கு குத்தகை நிறுவனங்களை வரவேற்றுள்ளது. அவ்விற்பனைக்குப் பின் இந்நிறுவனம் தன் நிதி நிலையை சீராக்கும் திட்டத்தின் ஒரு அங்கமாக அவ்விமானங்களை மாதாந்திர அடிப்படையில் வாடகைக்கு எடுத்துக் கொள்ளவும் தீர்மானித்திருந்தது.