டெல்லி: பொருளாதாரம் நிலைகுழைந்திருக்கும் இவ்வேளையில், இந்த நிதியாண்டின் முதல் 9 மாதத்தில் மார்ச் முதல் டிசம்பர் மாதம் வரையில், நேர்முக வரியாக 4.81 லட்ச கோடி ரூபாய் வசூல் செய்யப்பட்டுள்ளது. கடந்த வருடத்தை ஒப்பிடுகையில் இவ்வருடம் நேர்முக வரி வசூல் 12.33% அதிகரித்துள்ளது.
2012-13 நிதியாண்டில், ஏப்ரல்-டிசம்பர் காலகட்டத்தில், நேர்முக வரியாக 4.29 லட்ச கோடி ருபாய் வசூலானது.
நிகர நேர்முக வரி
இந்த நிதியாண்டில், நிகர நேர்முக வரியாக 4.15 லட்ச கோடி ரூபாய் வசூலாகி, 12.53% அதிகரித்துள்ளது. கடந்த வருடம் 3.69 லட்சம் கோடி ரூபாய் மட்டுமே வசூலானது என்று நிதி அமைச்சகம் வெளியிட்டஅறிக்கையில் தெரிவித்துள்ளது.
நேர்முக வரி இலக்கு
2013-14 நிதியாண்டில், 6.68 லட்ச கோடி ரூபாய், நேர்முக வரியாக வசூலாக வேண்டும் என்று அரசாங்கம் இலக்கை நிர்ணயித்துள்ளது. 2012-13-ல் 5.65 லட்ச கோடியாக இருந்த வசூல், 2013-14-ல் 19 சதவீத வளர்ச்சியை எட்ட வேண்டும் என்று எதிர்ப்பார்க்கிறது.
கார்ப்பரேட் வரி
கார்ப்பரேட் வரியின் மொத்த வசூல் 9.35 சதவீதமாக அதிகரித்து 2.84 லட்ச கோடி ரூபாயிலிருந்து 3.1 லட்சம் கோடி ரூபாய் வசூலாகியுள்ளது என்று நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
வருமான வரி
கடந்த 9 மாதங்களில் தனிநபர் வருமான வரியின் மொத்த வசூல் 18.53 சதவீதமாக அதிகரித்து 1.41 லட்ச கோடி ரூபாயிலிருந்து 1.67 லட்ச கோடி ரூபாய் வசூலாகியுள்ளது.
பங்கு பரிவர்த்தனை வரி
பங்கு பரிவர்த்தனை வரியாக 3,427 கோடி வசூலாகியுள்ளது. சொத்து வரியின் மொத்த வசூல் 11.92 சதவீதமாக அதிகரித்து 663 கோடி ரூபாயிலிருந்து 742 கோடி ரூபாய் வசூலாகியுள்ளது.
ப. சிதம்பரம்
இதற்கிடையில், நிதி அமைச்சர் ப. சிதம்பரம் நேர்முக வரி மற்றும் மறைமுக வரியை கையாளும் முதன்மை ஆணையர்களை சந்தித்து, வருவாய் அதிகரிப்பை கணக்கிட சொல்லியுள்ளார்.