டெல்லி: அரசு ஊழியர்களின் சம்பள விவரங்களை அறியும் உரிமை அவர்களின் மனைவிக்கு உண்டு எனவும் அவர்களின் சம்பள விவரங்களை பொதுமக்கள் அறியும் வண்ணம் வெளிப்ப்படையாக வைக்க வேண்டும் என்றும் மத்திய தகவல் ஆணையம் உறுதிப்பட தெரிவித்துள்ளது.
தகவல் துறை ஆணையர் திரு ஸ்ரீதர் ஆசார்யலு கூறுகையில், ஒவ்வொரு மனைவிமார்களும் தங்கள் கணவரின் சம்பளம் பற்றிய விவரங்களை, குறிப்பாக பராமரிப்புக் காரணங்களுக்காக, அறியும் உரிமையை பெற்றுள்ளார்கள் என தெரிவித்தார். "குறிப்பாக அரசு அலுவலரின் மனைவி, கணவரின் சம்பள விவரங்களை அறியும் உரிமை பெற்றுள்ளார்" என அவர் தெரிவித்தார்.
அரசு அலுவலர்களின் சம்பள விவரங்கள் தனிப்பட்ட விஷயம் அல்ல என்றும் அவை தகவல் பெறும் உரிமை சட்ட விதி 4(1)(b)(x) இன் படி தானாக முன்வந்து தெரிவிக்கத்தக்கவை என்றும் தெரிவித்தார்.
அரசு சம்பளங்கள் மக்கள் செலுத்தும் வரியிலிருந்து பெறப்படுபவையாதலால், அவை கண்டிப்பாக சட்டப்படி தெரிவிக்கப்பட வேண்டியவை என அவர் மேலும் தெரிவித்தார்.
"அரசு ஊழியரின் அல்லது அதிகாரியின் சம்பள விவரங்கள் தனிப்பட்ட விவரங்களாக கருதப்பட மாட்டாது. அரசு அதிகாரிகள் தனிப்பட்ட விவரங்களாகக் கருதி, சம்பள விவரங்களைக் கோரும் மனுக்களை நிராகரிக்கக்கூடாது" என்றார் அவர்.
இவ்வாறு மனுக்களை நிராகரித்த புது தில்லி மாநில அரசின் உள்துறையின் செயலை கண்டித்த அவர், இது போன்ற செயல்கள் தவறானவை என்றும் அபராதம் விதிக்கத்தவை என்றும் எச்சரித்தார். அம்மாநில அரசின் உள்துறையில் பணியாற்றும் ஒரு ஊழியரின் மனைவியான ஜோதி செஹெராவத் என்பவர் கேட்டிருந்த சம்பள விவரங்களை தர மறுத்ததால் இந்த எச்சரிக்கை விடப்பட்டது.
அந்த ஊழியர் இவ்வாறான தகவல்களைத் யாருக்கும் தர வேண்டாம் என அந்த துறை நிர்வாகத்திற்கு எழுத்து மூலம் கேட்டுக்கொண்டதால் அவரது மனைவிக்கு அந்த தகவல்கள் மறுக்கப்பட்டன.