டெல்லி: நாட்டில் தங்க இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளைத் தொடர்ந்து தங்கக்கடத்தல் அதிகரித்துள்ளதாக வந்துள்ள செய்திகளை நிதியமைச்சர் ப.சிதம்பரம் உறுதி செய்துள்ளார்.
இந்த கட்டுப்பாடுகளால் ஒவ்வொரு மாதமும் சுமார் 1,000 முதல் 3,000 கிலோ தங்கம் நாட்டிற்குள் கடத்திக் கொண்டுவரப்படுவதாக சுங்க தினத்தன்று வரி அதிகாரிகளிடையே நிகழ்த்திய உரையில் அவர் தெரிவித்தார்.
"தங்கக் கடத்தல் உயர்ந்துள்ளதை நான் அறிவேன். ஆனால், கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் 300 டன்களை எட்டிய இறக்குமதியை கட்டுக்குள் கொண்டுவர உதவிய இந்த இறக்குமதிக் கட்டுப்பாடுகள் மிகவும் அவசியமானவை" என மேலும் அவர் தெரிவித்தார்.
"இந்தக் கட்டுப்பாடுகளை விதிக்கவில்லையென்றால், நடப்புக் கணக்கு மற்றும் அன்னிய செலாவனித் தட்டுப்பாடுகளை நம்மால் சரிகட்ட இயலாது" என அவர் குறிப்பிட்டார். மேலும், வரும் மார்ச் மாத இறுதியில் இந்த தங்க இறக்குமதி மீதான கட்டுப்பாடுகள் மறு ஆய்வு செய்யப்படும் எனத் தெரிவித்தார்.
மறுஆய்வு
"இந்த வருட இறுதிக்குள் தங்க இறக்குமதிக் கட்டுப்பாடுகள் சிலவற்றை மறு ஆய்வு செய்ய முடியும் என நம்புகிறேன். ஆனால், அதை செய்யும் முன் நடப்புக் கணக்கு தட்டுபாடானது நம் கட்டுப்பாட்டிற்குள் இருக்க வேண்டியது அவசியம்" என்றும் அவர் கூறினார்.
3 முறை வரி உயர்வு!!
தங்க இறக்குமதியைக் கட்டுப்படுத்த, அரசு அதன் மீதான சுங்க வரியை கடந்த 2013 ஆம் ஆண்டில் மூன்று முறை உயர்த்தியது. அது தற்போது 10 சதவிகிதமாக உள்ளது.
ரூபாயின் மதிப்பு
இதனிடைய பெருகி வரும் நடப்புக்கணக்குப் பற்றக்குறை மற்றும் குறைந்து வரும் ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை சுட்டிகாட்டி, ரிசர்வு வங்கியும் இந்த தங்க இறக்குமதியுடன் தொடர்புடையது என தெரிவித்தார்.
தங்க இறக்குமதி
ரிசர்வு வங்கி மற்றும் மத்திய அரசின் பல்வேறு தடைகளின் காரணமாக மே மாதம் 162 டன்களாக இருந்த தங்க இறக்குமதி, நவம்பர் மாதத்தில் 19.3 டன்களாகக் குறைந்தது. மேலும் டிசம்பர் மாத இறக்குமதி நவம்பர் மாதத்தை ஒப்பிடுகையில் சற்று அதிகமாவே இருந்ததாக நிதித்துறை செயலர் சுமித் போஸ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இறக்குமதி செலவினங்கள்
இறக்குமதிகான செலவினங்களில் பெட்ரோலியப் பொருட்களுக்கு அடுத்தபடியாக தங்க இறக்குமதி பெரும் பங்கு வகிக்கிறது. தங்க இறக்குமதியில் ஏற்பட்ட உயர்வு நடப்புக்கணக்கு பற்றாக்குறையை முன் எப்போதும் இல்லாத உயர்ந்த அளவான 88.2 பில்லியன் டாலர் அல்லது மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 4.8 சதவிகித அளவிற்கு கடந்த ஆண்டில் இட்டுச்சென்றது.
ஏற்றுமதியை அதிகரிக்க வேண்டும்
"நீண்ட கால செயல் திட்டமானது ஏற்றுமதியை அதிகரிப்பதாகும். நம்மால் இயன்ற அளவு டாலர்களை ஏற்றுமதி மூலம் பெற்று அதை இறக்குமதி செலவுக்குப் பயன்படுத்த வேண்டும். நாம் ஏற்றுமதியை அதிகரிக்கும் வழிகளைக் கண்டறிய வேண்டும்" என்றார் அவர்.