டெல்லி: எண்ணெய் வளத்துறை அமைச்சரான வீரப்ப மொய்லி, சிஎன்ஜியின் விலை கிலோவுக்கு 15 ரூபாயாகவும், பைப்ட் நேச்சுரல் கேஸின் விலை க்யூபிக் மீட்டருக்கு 5 ரூபாயாகவும் குறைக்கப்படும் என்று திங்களன்று அறிவித்துள்ளார்.
சிஎன்ஜி விநியோகிஸ்தரான ஐஜிஎல் மற்றும் டெல்லி நகரில் உள்ள இதர கேஸ் விநியோக நிறுவனங்கள் குறைவான விலையில் வீட்டு உபயோக எரிவாயுவை பெறுவார்கள் என்று எண்ணெய் வளத்துறை அமைச்சர் கூறியுள்ளார். ஐஜிஎல் மற்றும் நகரின் பிற எரிவாயு விநியோக நிறுவனங்கள் உள்ளூர் களங்களின் மூலம், முன் போல் 80 சதவீதத் தேவைகள் மட்டுமின்றி தங்களின் முழுத் தேவைகளையும் பூர்த்தி செய்து கொள்ளலாம் என்றும் மொய்லி கூறியுள்ளார்.
அரவிந்த் கெஜ்ரிவால்
அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான டெல்லி அரசு, ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய வாக்குறுதிகளில் ஒன்றான சிஎன்ஜி விலைக்குறைப்புக்கான சட்டப்பூர்வ நடவடிக்கைகளை பரிசீலனை செய்து வருகிறது.
ரூ.4.50 விலை உயர்வு
சிஎன்ஜியின் (கம்ப்ரஸ்ட் நேச்சுரல் கேஸ்) விலை டெல்லியில் டிசம்பர் 26 ஆம் தேதி நள்ளிரவு முதல் திடீர்ரென்று கிலோவுக்கு 4.50 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. மூன்று மாதங்களுக்குள் இது இரண்டாவது விலையேற்றம் ஆகும். மேலும் சமையலறைகளுக்கு பைப் வழியாக விநியோகிக்கப்படும் சமையல் எரிவாயுவின் விலையும் கிலோவுக்கு 5.15 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
ஒரு கிலோ ரூ.50யை எட்டியது
இந்த வருடம், டெல்லியில் வருட ஆரம்பத்தில் கிலோவுக்கு 38.35 ரூபாயாக இருந்த சிஎன்ஜியின் விலையானது கிலோவுக்கு சுமார் 50.1 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது.
இந்திரபிரஸ்தா கேஸ் லிமிட்டெட்
தில்லியில் சிஎன்ஜி விநியோகஸ்தராக விளங்கும் இந்திரபிரஸ்தா கேஸ் லிமிட்டெட் (ஐஜிஎல்), டாலரின் மதிப்பேற்றம் மற்றும் உள்நாட்டு எரிவாயுவைக் காட்டிலும் நான்கு மடங்கு அதிகமான விலையுடன் இறக்குமதி செய்யப்படும் ரீகேஸிஃபைட் - லிக்விட் நேச்சுரல் கேஸின் (ஆர்எல்என்ஜி) மீதான சார்புநிலை அதிகரிப்பு ஆகியவையே இந்த விலையேற்றத்துக்கான காரணங்கள் என்று குறிப்பிட்டுள்ளது.
5 சதவீத குறைப்பு
ஆனால் டெல்லி மற்றும் என்ஸிஆர் ஆகியவற்றுக்கான குறைந்த விலை சமையல் எரிவாயு விநியோகத்திற்கான ஒதுக்கீட்டில் குஜராத் உயர்நீதிமன்ற ஆணையின் படி மேற்கொள்ளப்பட்ட சுமார் 5 சதவீத குறைப்பும் இத்தகைய விலையேற்றங்களை அத்தியாவசியமாக்கிவிட்டது என விலையேற்றத்திற்கான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.