டெல்லி: மத்திய அரசு ஒய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதியும் ஒய்வு பெற்ற ஆயுதப்படை தீர்ப்பாயத் தலைவருமான அஷோக் குமார் மாதுர் தலைமையில் 7வது ஊதிய கமிஷனை அமைத்து ராணுவம் மற்றும் பொது ஊழியர்கள் உள்ளிட்ட மத்திய அரசு ஊழியர்களின் சம்பள விகிதங்களை ஆய்வு செய்து திருத்தியமைக்கவுள்ளது.
மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் செயலர் விவேக் ரே இந்த கமஷனின் முழுநேர உறுப்பினராகவும், தேசிய பொது நிதி மற்றும் கொள்கை கல்லூரியின் இயக்குனர் ரத்தின் ராய் பகுதி நேர உறுப்பினராகவும் இருப்பார்கள்.
மத்திய செலவினங்கள் அமைச்சகத்தின் சிறப்பு அலுவலர் மீனா அகர்வால் இந்த கமிஷனின் செயலராகவும் செயல்படுவார்.
கடந்த ஆண்டின் செப்டம்பர் மாதத்தில் மத்திய நிதி அமைச்சகம் இந்த சம்பளக் கமிஷனை அமைக்க ஒப்புதல் அளித்தது. சம்பளம் தொடர்பான பரிந்துரைகளை சமர்ப்பிக்க சம்பளக் கமிஷன் சராசரியாக இரண்டாண்டுகள் எடுத்துக்கொள்ளும் என்றும் எனவே அடுத்த கட்டப் பரிந்துரைகள் 2016ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அமலுக்கு வரும் என்றும் நிதி அமைச்சகச் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
முதல் சம்பளக் கமிஷன் 1956ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது அப்போது முதல் வழக்கமாக மத்திய அரசு 10 வருடங்களுக்கு ஒரு முறை சம்பளக் கமிஷனை அமைத்து ஊழியர்களின் ஊதியங்களை மாற்றியமைத்து வருகின்றது.
6வது சம்பளக் கமிஷன் நீதிபதி பி.என்.ஸ்ரீகிருஷ்னா தலைமயில் கடந்த 2006 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் அமைக்கப்பட்டது. அது தன் பரிந்துரை அறிக்கையை 2008 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வழங்கினாலும், பரிந்துரைகள் 2006 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் பின் தேதியிட்டு அமல்படுத்தப்பட்டது. அந்த அறிக்கையில் கூறப்பட்ட பெரும்பாலான பரிந்துரைகளை சிறு மாறுதல்களோடு அரசு ஏற்றுக்கொண்டது.