டெல்லி: இந்திய இன்சூரன்ஸ் நிறுவனங்கள் தகவல்தொழில் நுட்பக் கருவிகள் மற்றும் சேவைகளை பெற 2014ஆம் நிதியாண்டில் 12,100 கோடி ரூபாய் செலவிடவுள்ளதாகவும், இந்த செலவு கடந்த ஆண்டை ஒப்பிடும்போது 12 சதவிகிதம் உயர்ந்துள்ளதாகவும் கார்ட்னர் அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.
இந்த மதிப்பீடானது பணியாளர் உள்பட, தகவல்தொழில் நுட்ப உட்கட்டமைப்புகள், மென்பொருள்கள், தகவல் தொழில் நுட்ப வெளிச் சேவைகள் மற்றும் தொலைத்தொடர்பு செலவுகளை உள்ளடக்கியதாகும்.
2014ஆம் ஆண்டில் 1,200 கோடி ரூபாய் மதிப்புள்ள மென்பொருள் பிரிவு மட்டும் 18 சதவிகிதம் உயர்ந்த அளவிற்கு வளர்ச்சியைக் கொண்டுள்ளதோடு இன்சூரன்ஸ் தொடர்பான மென்பொருள் தேவை இதற்கு மேலும் துணையாக உள்ளது. தகவல் தொழில் நுட்ப சேவைகள் மதிப்பு சுமார் 4000 கோடி ரூபாயாக இருப்பதோடு, 2014 ஆம் ஆண்டின் மிக அதிக செலவிடும் பிரிவாக உள்ளது. இது தொடர்ந்து நன்கு வளர்ச்சியைக் காணவிருப்பதோடு 16 சதவிகிதம் வரை வளரும்.
இந்தத் துறையில் பிபீஓ வர்த்தகம் 25 சதவிகித பங்குடன் முன்னணியிலும், இன்சூரன்ஸ் தொடர்பான மென்பொருள் செலவினங்களை உள்ளடக்கிய ஆலோசனை சேவைகள் 21 சதவிகிததுடன் அடுத்த இடத்திலும் உள்ளன.
"இந்திய இன்சூரன்ஸ் நிறுவனங்கள் தங்கள் காப்பீட்டு செயல்முறைளுக்கு, குறிப்பாக காப்பீட்டுச் சந்தையில் அதிக ஊடுருவலை மேற்கொள்ள, அதிக முக்கியத்துவம் தரத் துவங்கியுள்ளன" என கார்ட்னர் அமைப்பின் முதன்மை ஆய்வு வல்லுநர் டெர்ரி ஃபிங்கெல்டே தெரிவித்தார்.
"இது போன்ற உட்கட்டமைப்புச் செலவுகள் உயர்ந்து வருவதோடு, இந்திய நிறுவனங்கள் திறன் வாய்ந்த தொழில் நுட்ப சேவகளை நாடி தங்களுக்குத் தேவையான வழி நடத்தல்களையும் உதவிகளையும் பெறுவதில் மும்முரம் காட்டுகின்றன" என அவர் மேலும் தெரிவித்தார்.