டெல்லி: சுமார் ஐந்து கோடி முதலீட்டாளர்களுக்கு விவசாய நிலங்களை ஒதுக்குவதாகக் கூறிக் இரண்டு தனியார் நிறுவனங்கள் சுமார் 45,000 கோடி ரூபாய் பிரமிட் திட்ட முறையில் ஊழலை செய்துள்ளனர், இதை கடந்த வியாழனன்று சிபிஐ வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது.
"விவசாய நிலங்களின் விற்பனை மற்றும் சீரமைப்பு என்ற போர்வையிலான கூட்டு முதலீட்டுத் திட்டம் ஒன்றின் மூலம் முதலீடுகள் மூலம் பெறப்பட்ட சுமார் 45,000 கோடி ரூபாய் வரை மோசடி செய்யப்பட்டுள்ளது. இந்த ஊழலில் டெல்லியைச் சேர்ந்த நிறுவனம் ஒன்றும் இதர நிறுவனங்கள் பலவும் ஈடுபட்டிருப்பது முதல் கட்ட விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளது," என சிபிஐ பிரதிநிதி ஒருவர் கூறியுள்ளார்.
வழக்கு
உச்ச நீதிமன்ற ஆணையை பின்பற்றி, இந்த ஏஜென்ஸி, மேற்கூறிய நிறுவனம் மற்றும் இதே போன்ற செயல்பாடுகளுடன் முதலீட்டாளர்களை ஏமாற்றிய மற்றொரு நிறுவனம் ஆகிய இரண்டு நிறுவனங்களுக்கும் எதிராக வழக்கு பதிவு செய்துள்ளது.
முதலீட்டாளர்களின் பணம்
இத்திட்டத்தை ஏறக்கட்டிவிட்டு, முதலீட்டாளர்களுக்கு சேர வேண்டிய தொகைகளை திருப்பிக் கொடுக்கும்படி இவ்விரு நிறுவனங்களுள் முதலாவது நிறுவனத்துக்கு பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமனறம் உத்தரவு பிறப்பித்ததற்குப் பின் இந்த இரண்டாவது நிறுவனம் இதே போன்று செயல்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
சோதனை
கடந்த ஐந்து நாட்களில், சந்தேகிக்கப்படும் இதர நபர்களுக்கு அப்பாற்பட்டு, இந்நிறுவன இயக்குநர்களின் அலுவலக வளாகம் மற்றும் வீடுகளிலும் தொடர்ந்து பல கட்ட சோதனைகள் நடந்து வருகின்றன.
ஆவணங்கள் கைபற்றியது சிபிஐ
டெல்லி, ஹரியானா மற்றும் பஞ்சாப் ஆகிய பகுதிகளில் நிகழ்த்தப்பட்ட சோதனைகளில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட டெபாசிட்கள் தொடர்பான ஆவணங்களும் பணத்தை முறைகேடாக பயன்படுத்தியது தொடர்பான ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
பினாமி சொத்துக்கள்
மேலும் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இவர்களுக்கு இருக்கக்கூடிய பினாமி சொத்துக்கள் தொடர்பான ஆதாரங்கள் சிலவும் சிக்கியுள்ளன. ஆஸ்திரேலியாவில் செய்யப்பட்டுள்ள சில முதலீடுகளும் ஆராயப்பட்டு வருகின்றன என்று சிபிஐ அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
முக்கிய நபர்கள்
சிபிஐ அதிகாரி கூறுகையில், ஹர்சரண் சிங், ஸி.பி.தில்லான், ப்ரேம்சந்த், குர்மீத் சிங் மற்றும் சுப்ரதோ பட்டாச்சார்யா உள்ளிட்ட இயக்குநர்களுக்குச் சொந்தமான வளாகங்களிலும் இத்தேடுதல் வேட்டைகள் நடைபெற்று வருகின்றன என்றும் தெரிவித்துள்ளார்.