டெல்லி: இந்தியாவில் முக்கியமான தொழில் துறைகளுள் சேவைத் துறையும் ஒன்று. மேலும் அதிகளவில் அன்னிய முதலீடு செய்யப்படும் இத்துறையில், கடந்த 9 மாதங்களில் இத்துறையின் அன்னிய முதலீடு சுமார் 60சதவீதம் சரிந்துள்ளது.
இந்த சேவை துறையில் வங்கி, காப்பீடு, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு என பல துறைகள் உள்ளடக்கியதாக உள்ளது. தற்போதைய நிலவரத்தின் படி இத்துறையில் அன்னிய முதலீடாக 169 கோடி டாலர் மட்டுமே உள்ளது.
2013ஆம் நிதியாண்டின் இதே காலகட்டத்தில் அன்னிய முதலீடு சுமார் 404 கோடி டாலராக இருந்தது குறிப்பிடதக்கது. வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்படுமா அல்லது தொடர்ந்து ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி அமைக்குமா என்ற நிலையில் அன்னிய முதலீட்டாளர்கள் தங்களது முதலீட்டை திரும்பப் பெற்றுக்கொண்டனர்.
தேர்தலுக்கு பின் நிலை மாறும்
தேர்தல் முடிவிற்கு பின்னர் இந்த நிலை கண்டிப்பாக மாறும் என் சந்தை வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.
3 சதவீதம் சரிவு
சேவைத் துறையில் அன்னிய நேரடி முதலீடு குறைந்ததால் ஒட்டு மொத்தமாக இந்தியாவில் நேரடி அன்னிய முதலீடு 3 சதவீதம் குறைந்ததாக தனியார் வரி ஆலோசனை நிறுவனத்தின் தலைவர் கிருஷ்ணன் மல்ஹோத்ரா தெரிவித்தார்.
முதலீடு சரிந்தது
முந்தைய ஆண்டு இதே காலத்தில் செய்யப்பட்ட முதலீடு 2,278 கோடி டாலர், ஆனால் இப்போது 2,200 கோடி டாலர் மட்டுமே.
உள்நாட்டு உற்பத்தி
இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் சேவைத்துறையின் பங்களிப்பு 60 சதவீதமாக உள்ளது. கட்டுமான மேம்பாடு, உலோகத்துறை, ஹோட்டல் மற்றும் சுற்றுலாத் துறைகளிலும் அன்னிய நேரடி முதலீடு குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.