டெல்லி: டாடா மோட்டார்ஸின் ஜாகுவார் மற்றும் லேண்டு ரோவர் கார்களின் விற்பனை உலகச் சந்தைகளில் சுமார் 14 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த வருடத்தின் பிப்ரவரி மாதத்தில் மட்டும் சுமார் 30,487 ஜாகுவார் மற்றும் லேண்டு ரோவர் கார்களை விற்றுள்ளது. மேலும் சீனாவில் விற்பனை 44 சதவீதமும், மேற்கு அமெரிக்காவில் 12 சதவீத உயர்வும், ஆசிய பசிபிக் பகுதிகளில் 16 சதவீத உயர்வு பதிவாகியுள்ளது என டாடா நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த விற்பனை பற்றி ஜாகுவார் மற்றும் லேண்டு ரோவர் நிறுவனத்தின் விற்பனை பரிவின் தலைவர் ஆண்டி காஸ் கூறுகையில் "இந்த ஆண்டில் சிறந்த விற்பனை இலக்கை எட்டிய இரண்டாவது மாதம் இது, மேலும் உலகச் சந்தைகளில் ஜாகுவார் மற்றும் லேண்டு ரோவர் கார்களுக்கு மிகப்பெரிய வரவேற்பு உள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை" என்று தெரிவித்தார்.
சிறப்பான ஆண்டு
2014ஆம் வருடம் எங்கள் நிறுவனத்திற்கு மிகவும் சிறப்பான ஆண்டாக அமையும் என்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன் என்றும். மேலும் அவர் 2014ஆம் வருடத்தின் முதல் இரண்டு மாதங்களில் சுமார் 13 சதவீதம் விற்பனை அதிகரித்து 69,593 கார்களை விற்றுள்ளோம் என அவர் தெரிவித்தார்.
பிப்ரவரி மாத விற்பனை
பிப்ரவரி மாதம் மட்டும் 5,300 கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது, அதில் லேண்டு ரோவர் கார் மட்டும் 25,187 என அந்த அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தது.
ஆட்குறைப்பில் இறங்கி டாடா மோட்டார்ஸ்
விற்பனை கொடி கட்டிப் பறக்கும் நிலையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் உள்நாட்டு விற்பனை மிகவும் குறைந்துள்ளதால் இந்நிறுவனத்தில் இருந்து 600 பணியாளர்களை பணிநீக்கம் செய்ய டாடா மோட்டார்ஸ் நிறுவனம் முடிவு செய்யதுள்ளது.
பங்கு விலை நிலை
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தைப் பற்றி ஒரே சமையத்தில் நேர்மறை மற்றும் எதிர்மறை செய்திகள் வந்த நிலையில் பங்கு சந்தையில் பெரிய அளவில் எந்தொரு மாற்றமும் இல்லை. இன்று காலை முதல் 3.25 புள்ளிகள் உயர்ந்து 391.85 ரூபாய்க்கு பங்குகள் வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது.