மும்பை: ஆயுள் காப்பீட்டு பாலிசிதாரர் காணாமல் போய் விவரம் ஏதுமின்றி இருப்பின், சட்டப்படி அவரின் வாரிசுதாரரோ அல்லது அவரால் முன்மொழியப்பட்ட நபரோ இழப்பீட்டைப் பெற ஏழு வருடம் வரை காத்திருக்கவேண்டும் என காப்பீட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
"இந்திய சாட்சிகள் சட்டப்படி, காணாமல் போன ஒரு நபர் ஏழு வருடம் கழிந்த பிறகே இறந்தவராகக் கருதப்படுவார்" என இண்டியா ஃபர்ஸ்ட் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் இழப்பீட்டுத் துறைத் தலைவர் எஸ். ஹேமலாபதி தெரிவித்தார்.
சமீபத்தில் மிகப்பெரிய தேடுதலுக்கு பிறகு கிடைத்த மலேசிய விமானமான எம்எச்370 விமானத்தில் பயணித்த பயணிகளுக்கான இழப்பீட்டை அவர்களது வாரிசுகள் பெறத்தேவையான வழிமுறைகள் பற்றி அவரிடம் கேட்டபோது, "விமானத்தில் பயணிகள் பட்டியலில் உள்ள பெயர்களின் அடிப்படையில் அவர்களது வாரிசுகள் இறப்புச்சான்றிதழ் விண்ணப்பிக்க வேண்டும். இதற்காக இறப்புச் சான்றிதழ் வழங்கும் முறை எளிதாக்கப்பட்டுள்ளது."
24 மணி நேரம்
மலேசிய விமானத்தில் இறந்தவர்களின், இறப்புச் சான்றிதழ் மற்றும் உறுதிமொழிப்பத்திரம் அளித்த 24 மணி நேரத்தில் அவர்களுக்கான இன்சூரன்ஸ் இழப்பீடு வழங்கப்படும் என்று அவர் கூறினார்.
இறப்புச் சான்றிதழ்
விபத்துகள் தொடர்பான இறப்புகளில், இறப்புச் சான்றிதழ் விபத்து நிகழ்ந்த பகுதியின் உள்ளூர் நிர்வாகத்தால் வழங்கப்படவேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
பிரிமியத் தொகை
வாரிசுதாரர்கள் அல்லது முன்மொழியப்பட்டவர்கள் காப்பீட்டுப் பாலிசியை பத்திரமாக வைத்து இறந்தவர் குறித்த அதிகாரப்பூர்வ வெளியீடு வரும் வரையில் பிரிமியத் தொகையைச் செலுத்தவேண்டும்.
ரயில் விபத்து
"விமான நிறுவனங்கள் இது தொடர்பான நபர் பயணம் செய்ததை உறுதிசெய்து அதற்குண்டான சான்றை அளிக்கவேண்டும். இந்தியாவில், இரயில் பயணங்களின்போது ஒருவர் மற்றொருவர் பயணச்சீட்டில் பயணிக்கும்போது சிக்கல் உருவாகிறது. ஏனென்றால் இறந்த பயணி ஒரு சரியான பயணச்சீட்டை வைத்திருந்தார் என இரயில்வே நிர்வாகம் உறுதியளிக்காது" என காப்பீட்டுத் துறை சீரமைப்புக் குழுவான மல்ஹோத்ரா குழுவின் உறுப்பினரும் இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனம் எல்ஐசி-யின் முன்னாள் செயல் இயக்குனருமான ராமகிருஷ்னன் தெரிவித்தார்.
இயற்கை விபத்துக்கள்
இன்ஷுரன்ஸ் நிறுவன அதிகாரிகள் பூகம்பம், வெள்ளம், சுனாமி போன்ற பயங்கர சம்பவங்களின்போது இழப்பீட்டு வழிமுறைகள் எளிதாக்கப்படும் எனத் தெரிவித்தனர்
அலையன்ஸ் ஆஃப் ஜெர்மனி
இதனிடையே, மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விபத்துக்குள்ளான விமானத்தின் இழப்பீட்டுத் தொகையை அந்நிறுவனத்தின் காப்பீட்டு நிறுவனமான அல்லியன்ஸ் ஆப் ஜெர்மனி-யிடமிருந்து பெறத்துவங்கியுள்ளதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
இந்தியர்கள்
இந்த விமானத்தில் பயணித்த 5 இந்தியர்களின் குடும்பம் மிகவும் சங்கடமான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதில் 2 இளைஞர்கள் மற்றும் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் (தந்தை, தாய், மகன்) ஆகியோர் அடக்கம்.