டெல்லி: இந்தியா கூடிய விரைவில் வல்லரசு நாடாக உருவெடுக்கும் என்பதற்கு இது ஒரு அத்தாட்சி. ஜனவரி மற்றும் பிப்ரவரி ஆகிய 2 மாதங்களில் இந்தியாவில் சுமார் 15,700க்கும் அதிகமான நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இவற்றுள் மஹாராஷ்டிராவில் அதிக பட்சமான புது நிறுவனங்கள் துவங்கப்பட்டுள்ளது. நாட்டின் வளர்ச்சிக்கு தனியார் நிறுவனங்களின் பங்கு முகவும் முக்கியமானது. இத்தகைய தனியார் நிறுவனங்களின் செயல்பாடு மற்றும் திட்டங்கள் அனைத்தும் அரசு நிறுவனங்களுக்கு முற்றிலும் மாறுபட்டவை.
பிப்ரவரி மாதத்தின் போது பல்வேறு தொழில்துறைப் பிரிவுகளை பிரதிபலிக்கக்கூடிய நிறுவனங்கள், சுமார் 7,513 எண்ணிக்கைகளுக்கு அதிகமாக தொடங்கப்பட்டிருக்கின்றன. இவற்றின் அதிகாரப்பூர்வமான முதலீடு சுமார் 901.95 கோடி ரூபாய் என்று கூறப்படுகிறது.
ஜனவரி மாதத்தின் போது, சுமார் 8,206 புதிய வரவுகள் நிறுவனச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றின் அதிகாரப்பூர்வமான மூலதனம் சுமார் 943.21 கோடி ரூபாயை எட்டியுள்ளது.
15,719 புதிய நிறுவனங்கள்
மொத்தத்தில், 2014 ஆம் ஆண்டின் முதல் இரண்டு மாதங்களின் போது நாட்டில் சுமார் 15,719 புதிய நிறுவனங்கள் நிறுவப்பட்டுள்ளதாக கார்ப்பரேட் அஃபயர்ஸ் அமைச்சகத்தின் வசம் உள்ள சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.
முதலீடு
பிப்ரவரி மாதத்தின் போது புதிதாக நிறுவப்பட்ட மொத்த நிறுவனங்களுள் சுமார் 7,484 நிறுவனங்கள் ஏறத்தாழ 901.90 கோடி வரையிலான அதிகாரப்பூர்வமான மூலதனத்துடன், பங்குகளால் வரையறுக்கப்பட்ட நிறுவனங்களாக பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், 29 நிறுவனங்கள் சுமார் 4 லட்சம் ரூபாய் வரையிலான அதிகாரப்பூர்வமான மூலதனத்துடன், உத்தரவாதங்களால் வரையறுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சகத்தின் மாதாந்திர செய்தி அறிக்கை கூறுகிறது.
மஹாராஷ்டிரா முன்னிலை
ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களின் போது தொடங்கப்பட்ட பெரும்பாலான புதிய நிறுவனங்கள் மஹாராஷ்டிராவில் தான் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றன. இவ்விரு மாதங்களின் போது, இம்மாநிலத்தில் சுமார் 2,928 புதிய வரவுகள் இருந்துள்ளன.
இந்தியாவில் 14 லட்ச நிறுவனங்கள்
இந்தியாவில் ஏறத்தாழ 14 லட்சம் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் இருந்தாலும், இவற்றுள் சுமார் 9.5 லட்சம் நிறுவனங்கள் மட்டுமே செயல்பட்டு வருகின்றன.