டெல்லி: இந்தியாவில் மென்பொருள் சந்தை சுமார் 10% வளர்ச்சியடைந்து 4.76 பில்லியன் டாலர் என்ற அளவை 2013ஆம் ஆண்டு எட்டியது என்று ஆய்வு நிறுவனமான கார்ட்னர் தெரிவித்தது.
2012ஆம் ஆண்டு மென்பொருள் சந்தை மதிப்பு 4.334 பில்லியன் டாலராக இருந்தது. "நிறுவனங்கள் ஏற்கனவே உள்ள கட்டமைப்புகளை மேம்படுத்தும் தொழில்நுட்பங்களில் முதலீடு செய்ய முயன்று வருவதால் இந்திய மென்பொருள் தொழில் பலவருட சுழற்சி மாற்றங்களுக்கு உட்பட்டுள்ளது" என கார்ட்னர் ஆய்வு நிறுவன இயக்குனர் பவிஷ் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
புதிய தொழில்நுட்பம்
கிளவுட் டெக்னாலஜி மற்றும் சந்தா அடிப்படையிலான சேவைகள் ஆகியவற்றில் முன்னேற அதிகம் வாய்ப்புள்ளதால் நிறுவனங்கள் இதில் ஆர்வம் காட்டுவதுடன் போட்டித்தன்மை அதிகரித்து வருவதாக மேலும் அவர் தெரிவித்தார்..
மைக்ரோசாப்ட் முதல் இடம்
இதில் மைக்ரோசாப்ட் நிறுவனம் 20 சதவிகித சந்தையைக் கைப்பற்றி அதாவது 957.3 மில்லியன் டாலர் வருமானத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது. அந்நிறுவனம் 2012 ஆம் ஆண்டின் வருமானமான $865.9 மில்லியன் டாலரிலிருந்து 10.6 சதவிகித வளர்ச்சியைக் கண்டது.
ஆரக்கிள்
2013 ஆம் ஆண்டில் மென்பொருள் நிறுவனத் தரப்பட்டியலில் சற்று மாற்றம் காணப்பட்டது. ஆரக்கிள் நிறுவனம் 7.3 சதவிகித சந்தைப் பங்குடனும் 505 மில்லியன் டாலர் வருவாயுடனும் இரண்டாவது இடத்தைப் பிடித்தது.
வாடிக்கையாளர் முதலீடு
"வர்த்தக நுண்ணறிவு மற்றும் ஆய்வுகளையொட்டிய நிலவரங்கள் மற்றும் கணினிவிவர மேலாண்மையில் பெருகிவரும் வாடிக்கையாளர் முதலீடுகள் ஆரக்கிள் நிறுவன உயர்நிலை வளர்ச்சிக்கு உதவியாக இருந்தது" எனவும் பவிஷ் தெரிவித்தார்.
ஐபிஎம் மற்றும் பிற நிறுவனங்கள்
446.6 மில்லியன் டாலர் வருவாயுடன் ஐபிஎம் மூன்றாவது இடத்தையும், அதனைத் தொடர்ந்து சாப் நிறுவனம் 324.3 மில்லியன் டாலருடன் அடுத்த இடத்தையும், விஎம் வேர் (94.4 மில்லியன் டாலர்), சிஏ டெக்னாலஜீஸ் (52.7 மில்லியன் டாலர்) மற்றும் அடோப் (42.5 மில்லியன் டாலர்) ஆகியவை அடுத்தடுத்த இடங்களையும் பிடித்தன. எஸ்ஏஎஸ் மற்றும் ஹெச்பி ஆகிவை பட்டியலில் இருந்த பிற நிறுவனங்களாகும்.