டெல்லி: இந்தியாவிலேயே முதல் முறையாக ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் தன் விமானங்களில் பறக்கும்போது ஸ்மார்ட் போன் உள்ளிட்ட சொந்த எலெக்ட்ரானிக் சாதனங்களைப் பயன்படுத்திக்கொள்ள தன் பயணிகளுக்கு அனுமதி அளித்துள்ளது.
ஆனால் இவற்றின்மூலம் மின் காந்த அலைகளைப் பரப்பும் எந்த நடவடிக்கைகளிலும் ஈடுபடக்கூடாது என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
படம் , பாட்டு , புத்தகம்
விமானத்தில் பறக்கும்போது, பயணிகள் தங்கள் ஸ்மார்ட் போனை படம் பார்க்கவோ, பாட்டு கேட்கவோ, புத்தகங்கள் அல்லது இமெயில் படிக்கவோ பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும், அனுமதிக்கப்பட்ட சில இடங்களில் போன் காமெராக்களையும் உபயோகித்துக் கொள்ளலாம் என்று ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சஞ்சீவ் கபூர் கூறியுள்ளார்.
10,000 அடி உயரம்
மேலும், 10,000 அடி உயரத்திற்கு மேல் பறக்கும்போது மட்டும் இந்த எலெக்ட்ரானிக் சாதனங்களைப் பயன்படுத்த முடியும். விமானம் டேக் ஆஃப் ஆகும்போதோ அல்லது தரையிறங்கும்போதோ இவை தவறி கீழே விழுந்து எதிலாவது மோதி பெரும் சேதம் ஏற்படுவதைத் தவிர்க்கவே இந்த ஏற்பாடு.
தடை
மொபைல் போன், வாக்கி டாக்கி உள்ளிட்ட எலெக்ட்ரானிக் சாதனங்களில் இருந்து வெளியேறும் மின் காந்த ரேடியோ அலைகள், விமானத்தில் உள்ள தகவல் தொடர்புக் கருவிகளை ஊடுறுவும் அபாயம் இருப்பதால், இந்தச் சாதனங்களுக்கு முன்பு தடை விதிக்கப்பட்டிருந்தது.
சட்டத்தில் தளர்வு
இத்தடை சற்றே தளர்த்தப்பட்டு, இவற்றுக்கு அனுமதி அளித்து கடந்த ஏப்ரல் 23ம் தேதி இந்திய விமானக் கட்டுப்பாட்டு நிறுவனம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.