டெல்லி: இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு இயக்கப்படும் ஏர் இந்தியா மற்றும் ஜெட் ஏர்வேஸ் விமானங்களின் பாதுகாப்புத் தரத்தை சீரமைக்க அமெரிக்காவின் வாஷிங்டனைச் சேர்ந்த விக்ஸ் குரூப் நிறுவனத்தின் உதவியை நாட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
ஏர் இந்தியா மற்றும் ஜெட் ஏர்வேஸ் விமானங்களில் பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதாக அமெரிக்க விமானப் போக்குவரத்து பாதுகாப்பு தரத்தை நிர்ணயிக்கும் நிறுவனமான ஃபெடரல் ஏவியேசன் அட்மினிஸ்ட்ரேசன் (எஃப்.ஏ.ஏ.) கடந்த ஜனவரி மாதம் அறிவித்திருந்தது. இதனால் அந்த விமான நிறுவனங்கள் புதிதாக எந்த விமானத்தையும் அமெரிக்காவுக்கு இயக்க முடியாது. மேலும், பாதுகாப்புக்காக அதிகப்படியான சோதனைகளும் நடத்தப்படும்.
மத்திய அரசு
இதையடுத்து மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. "எஃப்.ஏ.ஏயின் சில முன்னாள் அதிகாரிகள்தான் விக்ஸ் குரூப் நிறுவனத்தை நடத்தி வருவதால், அதன் நடைமுறைகளும் நிறைகுறைகளும் அவர்களுக்கு அத்துப்படியாக இருக்கும். இது நமக்கு நல்லதுதான்" என்று அரசு அதிகாரி ஒருவர் கூறினார்.
விமானப் போக்குவரத்து கழகம்
மத்திய அரசின் பொது மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் இதற்கான இறுதிக்கட்ட வரைவுகளை தயாரித்து வருகிறது.
விக்ஸ் குரூப் நிறுவனம்
ஏற்கனவே அஸெர்பைஜான் (Azerbaijan), கேப் வெர்டே (Cape Verde), கென்யா, சவுதி அரேபியா, டிரினிடாட் & டொபாகோ, மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகளின் விமானப் போக்குவரத்து பாதுகாப்புத் தரத்தை சர்வதேச தரத்திற்கு இணையாக சீரமைக்க விக்ஸ் குரூப் நிறுவனம் உதவியுள்ளது. சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து நிறுவனம்தான் சர்வதேச பாதுகாப்பு தரத்தை நிர்ணயிக்கிறது.
இந்தியா டூ அமெரிக்கா
இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு ஏர் இந்தியா நிறுவனம் வாரத்திற்கு 21 விமானங்களையும், ஜெட் ஏர்வேஸ் 7 விமானங்களையும் இயக்குகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
மற்ற விமான நிறுவனங்கள்
இந்தியாவின் மற்ற விமான நிறுவனங்கள் பெரும்பாலும் தென்கிழக்கு மற்றும் மேற்காசிய நாடுகளுக்கு தங்கள் விமானங்களை இயக்குகின்றன. ஏர்ஆசியா மற்றும் டாடா-எஸ்.ஐ.ஏ. ஆகிய புதிய விமான நிறுவனங்களும் இந்த ஆண்டு தங்கள் சேவைகளைத் துவக்க உள்ளன.