டெல்லி: மொரீசியஸ் நாட்டிலிருந்து இந்தியாவுக்குக் கிடைத்துக் கொண்டிருந்த அந்நிய நேரடி முதலீடு கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு பாதிக்கும் மேல் குறைந்துள்ளதாக நிதியமைச்சகத்தின் தகவல் அறிக்கை தெரவித்துள்ளது.
ஏப்ரல் 2013 முதல் கடந்த பிப்ரவரி 2014 வரை அந்த நாடு 4.48 பில்லியன் டாலர்கள் மட்டுமே மொரீசியஸ் நம் நாட்டில் முதலீடு செய்துள்ளது என்றும், ஆனால் கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் மொரீசியஸ் செய்த முதலீட்டுத் தொகை 8.97 பில்லியன் டாலர்கள் என்றும் இந்திய தொழில் திட்ட மற்றும் முன்னேற்றத் துறை (டி.ஐ.பி.பி) அறிவித்துள்ளது.
முதலீட்டு வீழ்ச்சி
அந்நிய நேரடி முதலீட்டில் நிறைய வரிச் சலுகைகளை இந்தியா அறிவித்திருந்ததால் மொரீசியஸ் நாட்டிலிருந்து தாறுமாறாக முதலீடு செய்ய ஆரம்பித்தனர். இதைக் கட்டுக்குள் கொண்டுவரும் பொருட்டு பல வரிச் சலுகைகளை இந்தியா அதிரடியாக ரத்து செய்துவிட்டது. இதனால் முதலீட்டாளர்களுக்குக் கிடைத்துக் கொண்டிருந்த வரிச் சலுகைகள் குறைந்து போனதுதான் இந்த முதலீட்டு வீழ்ச்சிக்குக் காரணமாகக் கூறப்படுகிறது.
முதலீடு
கடந்த சில ஆண்டுகளில் அந்நிய நேரடி முதலீடு மூலம் நம் நாட்டில் அதிக அளவில் முதலீடு செய்த நாடுகளில் மொரீசியஸ் நாடும் ஒன்று. ஏப்ரல் 2000 முதல் பிப்ரவரி 2014 வரை 78.15 பில்லியன் டாலர்கள் வரை மொரீசியஸ் இந்தியாவில் முதலீடு செய்துள்ளது.
மொரீசியஸ்
இந்தியாவுக்குக் கிடைக்கும் அந்நிய நேரடி முதலீட்டில் 37 சதவீதம் மொரீசியஸ் நாட்டிலிருந்துதான் கிடைத்துள்ளது. இந்த நாட்டின் மக்கள்தொகை சுமார் 20 லட்சம்தான் என்பதும் அதன் உள்நாட்டு வர்த்தக மதிப்பு (ஜி.டி.பி.) சுமார் 10 பில்லியன் டாலர்கள் மட்டுமே என்பதும் குறிப்பிடத்தக்கது.
அன்னிய முதலீடு குறைவு
இந்தியாவின் ஒட்டுமொத்த அந்நிய நேரடி முதலீடே கடந்த நிதியாண்டில் குறைந்துள்ளதாகவும் டி.ஐ.பி.பி. கூறியுள்ளது. ஏப்ரல் 2012 முதல் கடந்த ஜனவரி 2013 வரை கிடைத்த முதலீடு 19.10 பில்லியன் டாலர்கள். ஆனால் ஏப்ரல் 2013 முதல் கடந்த ஜனவரி 2014 வரை 18.79 பில்லியன் டாலர்கள் மட்டுமே கிடைத்துள்ளது.