சென்னை: இந்தியாவில் தங்க இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட கடும் கட்டுப்பாடுகளைத் தொடர்ந்து கடந்த ஏப்ரல் மாதம் தங்க இறக்குமதி 74 சதவீதம் வரை வீழ்ச்சியடைந்தது.
ஏப்ரல் 2013-ல் 6.78 பில்லியன் டாலர்களுக்கு தங்கம் இறக்குமதி செய்யப்பட்டது. ஆனால் 2014ஆம் நிதியாண்டின் ஏப்ரல் மாதத்தில் 1.75 பில்லியன் டாலர் மதிப்புள்ள தங்கம் மட்டுமே இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.
நிதிப் பற்றாக்குறை
இந்தியாவின் நிதிப் பற்றாக்குறை கடந்த 2012-13 நிதியாண்டில் 4.8 சதவீதம் வரை உயர்ந்து புதிய உச்சத்தைத் தொட்டு, 88 பில்லியன் டாலர்கள் என்ற அளவுக்கு இருந்தது. தங்கம் மற்றும் பெட்ரோலியப் பொருட்கள் அதிக அளவில் இறக்குமதி செய்ததே இதற்குக் முக்கிய காரணமாகக் கூறப்பட்டது. இதனால் ரூபாயின் மதிப்பு சரிந்து, பணவீக்கமும் அதிகரித்தது.
இறக்குமதி கட்டுப்பாடு
இந்த நிதிப் பற்றாக்குறையை ஈடுகட்டவே தங்க இறக்குமதியில் கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டன. தங்க இறக்குமதிக்கான சுங்க வரி 10 சதவீதமாக அதிகரிக்கப்பட்டது. மேலும், தங்க நாணயங்கள் மற்றும் மெடாலியன் எனப்படும் தங்க காசுகள் ஆகியவற்றின் இறக்குமதிக்கும் தடை விதிக்கப்பட்டது.
நிதியமைச்சகம்
இதையடுத்து நிதியமைச்சகம் விதித்த இறக்குமதி கட்டுப்பாடுகளின் காரணமாக கடந்த நிதியாண்டில் (2013-14) நிதிப் பற்றாக்குறை 32 பில்லியன் டாலர்களாகக் குறைந்தது. தற்போதைய நிதியாண்டில் (2014-15) இது மேலும் குறைந்து, 10 பில்லியன் டாலர்களைத் தொட்டுள்ளது.
தங்கம்
முன்பெல்லாம் தங்கம் நகைகள் செய்வதற்க மட்டுமே வாங்கப்பட்டது, தற்போது சேமிப்பு, முதலீடு என பல பரிமானங்களில் தங்கத்தின் மீது மக்கள் பணத்தை கொட்டுகின்றனர்.