டெல்லி: மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோதுதான் இந்தியப் பொருளாதாரம் நல்ல வளர்ச்சி கண்டது என்று டாடா குழுமத்தின் தலைவர் ரத்தன் டாடா புகழாரம் சூட்டியுள்ளார்.
பிரதமர் பதவிக்கு விடை கொடுக்கும் மன்மோகன் சிங்கிற்கு டுவிட்டர் மூலம் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் இவ்வாறு டாடா பாராட்டியுள்ளார்.
"இந்தியப் பொருளாதாரத்தை உலக அளவில் தூக்கி நிறுத்திய மன்மோகன் சிங்கிற்கு இந்தியர்கள் அனைவரும் சல்யூட் செய்ய வேண்டும். இருமுறை தொடர்ந்து பிரதமர் பதவி வகித்த மன்மோகன் சிங்கின் முதல் ஐந்து ஆண்டுகளில் இந்தியப் பொருளாதாரம் நல்ல வளர்ச்சி கண்டது.
அவருடைய 2-ஆவது ஐந்து ஆண்டுகளில் இந்தியப் பொருளாதாரம் பெரும் பின்னடைவைச் சந்தித்தது. இதனால் பணவீக்கமும் அதிகரித்து மன்மோகன் சிங்கின் அரசே ஆட்டம் கண்டுவிட்டது. இருந்தாலும் ஒட்டுமொத்தத்தில் அவர் நம் நினைவில் எப்போதும் நீங்கா இடம் பிடித்திருப்பார்" என்று தன் டுவிட்டர் செய்தியில் பிரதமரைப் புகழ்ந்துள்ளார் டாடா.