டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களின் பொருளாதார ஆலோசனை குழுவின் தலைவர் பதவியிலிருந்து, சி.ரங்கராஜன் விலகினார். 16 வது நாடாளுமன்ற தேர்தலில், காங்கிரஸ் கூட்டணி முன்றாம் கூட்டணியை விட குறைந்த இடங்களில் வெற்றி பெற்று படுதோல்வி அடைந்தது. இதை தொடர்ந்து புதிய பிரதமராக, பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த நரேந்திர மோடி பதவியேற்கும் தருவாயில், பிரதமர் மன்மோகன் சிங், 17ம் தேதி பதவி விலகினார்.
இந்நிலையில், மன்மோகன் சிங்கின் பொருளாதார ஆலோசனை குழுவின் தலைவரான சி.ரங்கராஜன் நேற்று ராஜினாமா செய்தார்.
சி.ரங்கராஜன்
இவர் முன்னாள் ராஜ்ய சபா உறுப்பினர் ஆவார், மேலும் இவர் 1992ஆம் ஆண்டு டிசம்பர் முதல் 1997ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வரை ரிசர்வ் வங்கியின் கவர்னராக இருந்தவர். இதுமட்டும் அல்லாமல் பல முக்கிய பதவிகளில் பணியாற்றியவர்.
பொருளாதார ஆலோசனை குழு
இவர் கடந்த 2009ஆம் ஆண்டு முதல் பொருளாதார ஆலோசனை குழுவின் தலைவராக பதவி வகித்தார். ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஆட்சி கவிழ்ந்ததால் இவர் பதவி விலகும் நிலைக்கு தள்ளப்பட்டார்.
ராஜினாமா
இவரது ராஜினாமா பற்றி மத்திய அரசு தெரிவிக்கையில் "பொருளாதார ஆலோசனை குழுவின் தலைவர் ரங்கராஜன் ராஜினாமா கடிதம் சமர்ப்பித்துள்ளார். மேலும் அவர் இம்மாத இறுதி வரை இப்பதவியில் நீடிப்பார்" என மத்திய அரசின் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.
நான்கு பேர்
இக்குழுவில் இருக்கும் சவுமித்ரா சவுத்ரி, வி.எஸ்.வியாஸ், புலின் பி.நாயக், திலிப் எம்.நாச்சானே ஆகியோரும் விரைவில் ராஜினாமா கடிதத்தை அளிக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.
பிரதமர்
பொதுவாக பிரதமர் பதவிக்காலம் முடிவடையும் போது, பொருளாதார ஆலோசனை குழுவின் பதவிக்காலமும் முடிவடைந்து விடும் என்பதால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, மத்திய அரசின் செய்தி தொடர்பாளர் கூறினார்.