டெல்லி: இந்தியாவின் மிகப்பெரிய மலிவு விலை விமான நிறுவனமான ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் கிங்பிஷர் நிறுவனத்துடன் போட்டி போட்டுக்கொண்டு கடந்த நிதியாண்டில் ரூ.1,003 கோடி நஷ்டத்தை பதிவு செய்தது. இதனால் இந்நிறுவனத்தின் செயல்பாடு கேள்விகுறியானது. இத்தகைய பெரிய நிதிபற்றாக்குறையை குறைக்க ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் வெளிநாட்டு முதலீட்டாளர்களிடம் கையேந்தியுள்ளது.
கடந்த நிதியாண்டில் இந்திய பொருளாதாரத்தை உலுக்கிய ரூபாய் மதிப்பின் பாதிப்பு விமான போக்குவரத்து துறையை கடுமையாக பாதித்தது. அதிலும் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தை கொஞ்சம் அதிகமாகவே பாதித்தது.
கலாநிதி மாறன்
இந்தியாவின் மீடியா மன்னன் என போற்றப்படும் சன் நெட்வொர்கின் கலாநிதி மாறன், ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தை தலைமை வகித்து கடந்த ஜூன் 2010ஆம் ஆண்டு முதல் நடத்தி வருகிறார். தற்போது இருக்கும் நிலைமையில் இந்நிறுவனம் தொடர்ந்து செயல்பட சில ஆயிரம் கோடிகள் தேவை என்பதே உண்மை.
அவசர நிலை
நாங்கள் மிகவும் அவசர நிதி தேவையில் இருக்கிறோம், வெளிநாட்டு முதலீட்டாளர்களிடம் இருந்து கிடைக்கும் பணத்தை கொண்டுதான் நிறுவனத்தின் நிலுவை கட்டணங்களை செலுத்த முடியும் என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
1,200 கோடி
சிட்னி-யை சேர்ந்த ஒரு விமான போக்குவரத்து ஆய்வு நிறுவனத்தின் கணிப்பின் படி ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் தொடர்ந்து செயல்பட குறைந்தது ரூ.1,200 கோடி தேவை என இந்நிறுவனம் கூறுகிறது.
பங்கு சந்தை
இத்தகைய நிலையிலும் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் பங்குகள் 3.32 சதவீதம் உயர்ந்து 17.10 ரூபாயிக்கு விற்பனை செய்யப்படுகிறது.