சென்னை: இன்றைய கார்ப்பரேட் உலகில் உங்கள் வேலையைத் தக்கவைத்துக் கொள்வது பெரும் சவாலான விஷயம்தான். நீங்கள் கடமையே கண்ணாக உங்கள் வேலையைச் செய்து கொண்டிருந்தாலும், உங்களுக்கே தெரியாமல் உங்களுக்குப் பின்னால் ஒரு படுகுழி தோண்டப்பட்டிருக்கும்.
தனியார் கம்பெனிகள் என்பதால், ஏன் எதற்கு என கேள்வி கேட்பதற்குக் கூட வாய்ப்பளிக்காமல், உங்கள் வேலைக்குக் கல்தா கொடுத்து விடுவார்கள். திடீரென உங்களைக் கூப்பிட்டு, வம்படியாக உங்களை ராஜினாமா செய்யச் சொல்லி, அந்த நிமிடத்திலேயே 'பை பை' சொல்லி ஆஃபீஸ் வாசலைக் காண்பித்து விடுவார்கள்.
கடுகடு மேனேஜர்களையும், புரமோஷனுக்காகக் காத்துக் கொண்டிருக்கும் உங்களுடன் பணிபுரிபவர்களையும் சமாளித்து, ஆஃபீஸில் உங்கள் சீட்டைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்ள இதோ சில டிப்ஸ்:
கிசுகிசு வேண்டாம்
கிசுகிசுக்களுக்கு எப்போதும், எங்கும் பஞ்சமே கிடையாது. உங்கள் நிறுவனத்தில் எந்த கிசுகிசுவிலும் மாட்டிக் கொள்ளாதீர்கள். அது உங்கள் வேலைக்கு உலை வைக்க நிறைய வாய்ப்புக்கள் உண்டு. குறிப்பாக, நீங்கள் புதிதாக ஒரு இடத்தில் வேலைக்குச் சேர்ந்திருந்தால் ரொம்ப கவனமாக இருக்க வேண்டும். யார், எந்த ரூபத்தில் போட்டுக் கொடுப்பார்கள் என்றே தெரியாது.
வொர்க் லைப் பேலன்ஸ் ரொம்ப முக்கியம்
இது கொஞ்சம் கஷ்டம்தான், ஆனா வேலையையும் வாழ்க்கையையும் பேலன்ஸ் செய்து வைத்திருப்பது ரொம்ப முக்கியம். நீங்கள் சுறுசுறுப்பாக வேலை செய்தாலும், அதற்கிடையில் கொஞ்சம் கொஞ்சம் பிரேக் எடுத்துக் கொண்டு மனதை ரிலாக்ஸ் செய்வது மிகவும் அவசியம்.
புகார் கூற வேண்டாம்
அநாவசியமாக யார் மீதும் புகார் கூறிக்கொண்டு இருக்க வேண்டாம். அதை யாரும் விரும்ப மாட்டார்கள். அந்த நேரத்தில் கட கடவென்று உங்கள் வேலைகளை முடித்து விடுங்கள். அதற்காக, உங்களைப் பற்றி யாரும் ஏதும் தேவையில்லாமல் பேசினால் சும்மா விடாதீர்கள்.
புத்திசாலித்தனம் தேவை
உங்கள் வேலைகளை திறம்பட செய்து முடிப்பதில் நீங்கள் கெட்டிக்காரராக இருக்கலாம். அத்துடன் கொஞ்சம் புத்திசாலித்தனத்தையும் வளர்த்துக் கொள்வது இந்த கார்ப்ரேட் உலகில் ரொம்ப முக்கியம்.
புதிதாக கற்றுக் கொள்ளுங்கள்
நீங்கள் உங்கள் வேலையில் கண்ணும் கருத்துமாக இருந்தாலும், உங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை யாருக்கும் தெரியாமல் பாருங்கள். தெரியாத விஷயம் ஏதாவது இருந்தால் உடனே கற்றுக் கொள்ளுங்கள். அப்போது இல்லாவிட்டாலும் அது பின்னால் உதவும்.
விழிப்புடன் இருப்பது அவசியம்
உங்கள் முதுகில் குத்துவதற்கென்றே ரூம் போட்டு யோசித்து புதுப்புது கதைகளைக் கட்டிவிடுவதற்கு சிலர் தயாராக இருப்பார்கள். மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அதற்காக அவர்கள் லெவலுக்கு இறங்க வேண்டியதில்லை. உங்கள் வேலைகளை கனகச்சிதமாக செய்தாலே போதும்.
ஆஃபீஸில் சொந்த விஷயம் வேண்டாம்
நாம் வேலை பார்க்கும் இடத்தில்தான் நமக்கு நிறைய நண்பர்கள் கிடைப்பார்கள். அதற்காக அவர்களுடன் ரொம்பவும் சொந்தம் கொண்டாட வேண்டிய அவசியமில்லை. எதற்கும் ஒரு எல்லை உண்டு, என்ன சரிதானே..
ஈகோ உங்களின் முதல் எதிரி
நீங்கள் உங்கள் வேலைகளைச் சிறப்பாகச் செய்வது நல்ல விஷயம்தான். அதற்காக உங்களை நீங்களே பெருமை பீத்திக்கொள்வது, பிறரை மட்டம் தட்டுவது போன்ற செயல்களை செய்ய வேண்டும். இதனால் மற்றவர்களுக்கு ஈகோ வளர்த்து விடும் வாய்ப்பாக அமைந்து விடும்.
கடுமையான உழைப்பு
இப்போதெல்லாம் ஸ்மார்ட்டாக வேலை செய்வதுதான் பெஸ்ட் என்று பலரும் கூறி வருகிறார்கள். ஆனால் எப்போதும் கடின உழைப்புக்கு ஈடு இணை எதுவுமே இல்லை.