மும்பை: வங்கி வைப்பு நிதிகள் காலாவதியாகி 3 ஆண்டுகளுக்கும் மேல் எந்தவிதமான பரிவர்த்தனையும் இல்லாமல் வங்கிக் கணக்கில் கிடக்கும் அன்னிய நாணயங்கள் அனைத்தும் இந்திய ரூபாய்களாக மாற்றப்பட வேண்டும் என்று ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.
அத்தகைய வங்கிக் வைப்பு நிதி கணக்குகளை வைத்திருப்பவர்கள் அந்த அந்நிய கரன்சிகளை உரிய முறையில் பயன்படுத்திக் கொள்ள தத்தம் வங்கிகள் வாடிக்கையாளருக்கு 3 மாத காலக்கெடு விதிக்க வேண்டும் என்றும், அதற்குப் பிறகு அவற்றை இந்திய ரூபாயாக மாற்ற வேண்டும் என்றும் நாட்டிலுள்ள அனைத்து வங்கிகளையும் ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.
அப்படி மாற்றப்பட்ட பிறகு அந்தக் கணக்கில் உள்ள இந்திய ரூபாய்க்கு ஏற்றபடியே அதற்கான வட்டியும் கிடைக்கும் என்றும் ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.
இந்திய வங்கிகளில் தேவையில்லாமல் தேங்கிக் கிடக்கும் அன்னிய நாணயங்களை இவ்வாறு இந்திய ரூபாயாக மாற்றுவதன் மூலம், ரூபாயின் மதிப்பு கணிசமாக உயரும் என்று ரிசர்வ் வங்கி நம்புகிறது.