சென்னை: இந்தியாவின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்களின் விற்பனை மே மாதம் அதிகரித்து, நாட்டில் இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களின் ஏற்றுமதி கணிசமாக உயர்ந்துள்ளது குறிப்பிடதக்கது. மேலும் ஏற்றுமதி அதிகரித்துள்ளதால் டாலர் மற்றும் அன்னிய நாணயங்களின் இருப்பு அதிகரித்து இந்திய ருபாய் மதிப்பு 58 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.
இதில் மஹிந்திரா நிறுவன தனது இரு சக்கர வாகன விற்பனையில் 131 சதவீதம் உயர்வை சந்தித்துள்ளது. மேலும் ஆட்சி மாற்றத்திற்கு பிறகு ஆட்டோமொபைல் சந்தை மிகுந்த புத்துணர்வுடன் செயல்பட்டு வருகிறது. மேலும் இந்திய ஆட்டோமொபைல் நிறுவனங்களின் விற்பனை மற்றும் ஏற்றுமதி விவரங்களை பார்போம்.
மஹிந்திரா & மஹிந்திரா
இந்நிறுவனத்தின் இந்திய விற்பனை கடந்த மே மாதத்தில் மட்டும் 131 சதவீத உயர்வை பெற்றுள்ளது, அதேபோல் 946 இரு சக்கர வாகனங்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளது இதன் மதிப்பு 16.5 பில்லியன் டாலர்.
ஹீரோ மோட்டோகார்ப்
இந்தியாவின் மிகப்பெரிய இருசக்கர வாகன விற்பனை மற்றும் தயாரிப்பு நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப் கடந்த மே மாதம் 602,481 வாகனங்களை விற்றுள்ளது. இந்த எண்ணிக்கை கடந்த வருடத்தை ஒப்பிடுகையில் 8 சதவீதம் உயர்வாகும். மேலும் இந்நிறுவனம் ஹோண்டா நிறுவனத்திடம் இருந்து பிரிந்ததை தொடர்ந்து இந்நிறுவனம் தொழில்நுட்பத்தில் அதிகப்படியாக முதலீடு செய்து வருகிறது.
டிவிஎஸ்
சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் டிவிஎஸ் நிறுவனம், 2014ஆம் ஆண்டின் மே மாதத்தில் 2,10,293 வாகனங்களை விற்று 27.33 சதவீத உயர்வை எட்டியுள்ளது.
மாருதி சுசூகி
இந்தியாவின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசூகி இந்தியா நிறுவனம் 90,560 கார்களை விற்றுள்ளது, அதேபோல் 10,365 கார்களை ஏற்றுமதி செய்துள்ளது குறிப்பிடதக்கது.
பஜாஜ் ஆட்டோ
இந்தியாவின் மிகப்பெரிய இரு சக்கர வாகன ஏற்றுமதி நிறுவனமான பஜாஜ் ஆட்டோ விற்பனையில் 4 சதவீத உயர்வும், ஏற்றுமதியில் 40 சதவீத உயர்வும் கண்டுள்ளது.
ஹூண்டாய் மோட்டார்
இந்தியாவின் இரண்டாம் கார் தயாரிப்பு நிறுவனமான ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் ஏற்றுமதியில் 12.8 சதவீத உயர்வடைந்துள்ளதாக இந்நிறுவனத்தின் விற்பனை பரிவின் தலைவர் ராகேஷ் தெரிவித்தார்.