சென்னை: இந்தியாவில் ஏர்ஏசியா விமான நிறுவனத்தின் சேவை துவங்கியதை தொடர்ந்து, ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் விமான பயண வாடிக்கையாளர்களுக்கு பல சலுகைகளை வழங்கிக் கொண்டிருக்கிறது.
அதன் ஒரு பகுதியாக சென்னை, பெங்களூரு, ஹைதராபாத் உள்ளிட்ட 8 நகரங்களுக்கு இடையே ஸ்பைஸ்ஜெட் விமானங்களில் பறப்பதற்கு வெறும் ரூ.1999 மட்டுமே போதும் என்று ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் அறிவித்துள்ளது.
ஸ்பைஸ்ஜெட் நிறுவனம்
இந்த ஆண்டு ஜூலை 11 முதல் செப்டம்பர் 30 வரை ஸ்பைஸ்ஜெட்டில் பயணிப்பவர்களுக்கு இந்த சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. "இந்தத் தேதிகளில் பயணிகள் மிகவும் மலிவான விலையிலும் சிறந்த சேவையுடன் எங்கள் விமானங்களில் பறக்க முடியும்" என்று அந்த நிறுவனத்தின் தலைமை வர்த்தக அதிகாரி கானேஸ்வரன் அவிலி தெரிவித்தார்.
ஏர்ஏசியாவின் முதல் பயணம்
இந்தியாவில் ஏர்ஏசியாவின் முதல் பயணத்தைத் தொடங்குவதற்கு 48 மணி நேரங்களுக்கு முன்பாகவே ஸ்பைஸ்ஜெட் இதற்கான அறிவிப்பை வெளியிட்டது குறிப்பிடதக்கது.
அதே நேரம்.. அதே இடம்..
மேலும் ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் இச்சலுகை விலை டிக்கெட் புக்கிங்கை, ஏர்ஏசியா தன் பயணத்தை ஆரம்பித்த ஜூன் 12ஆம் தேதி அன்றே துவங்கியது.
மற்ற நிறுவனங்கள்
"ஸ்பைஸ்ஜெட்டின் இந்த சலுகை அறிவிப்பைத் தொடர்ந்து, இந்தியாவின் முக்கிய நகரங்களுக்கு விமானங்களை இயக்கிக் கொண்டிருக்கும் மற்ற விமான நிறுவனங்களும் விரைவில் வேறு பல சலுகைகளை அளிக்கும் என எதிர்பார்க்கிறோம்" என்று ஆன்லைன் விமான டிக்கெட் புக்கிங் நிறுவனமான ezeego1.co.in அதிகாரி நீலு சிங் தெரிவித்துள்ளார்.
ஏர்ஏசியா
மலேசியாவைச் சேர்ந்த ஏர் ஏசியா விமான நிறுவனம், தங்கள் பயணிகளுக்குப் பலவிதமான சலுகைகளை அளித்து வருகிறது என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயமே! இந்தியாவில் இந்த நிறுவனம் தன்னுடைய முதல் விமானத்தை பெங்களூரிலிருந்து கோவாவுக்கு ஜூன் 12ல் இயக்கியது குறிப்பிடத்தக்கது.