நொய்டா: உத்தரப்பிரதேசம் அரசு 23 நிறுவனங்களுடன் ரூ.54,606 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது. இவற்றில் பெரும்பாலான ஒப்பந்தங்கள் நொய்டா நகரத்தின் வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்லும் நோக்கிலேயே கையெழுத்தாகியுள்ளன.
இதைத் தெரிவித்த உ.பி. அரசின் தலைமைச் செயலர் அலோக் ராஜன், சாப்ட்வேர் நிறுவனங்களின் கூட்டமைப்பான நாஸ்காமின் தலைமையகம் நொய்டாவுக்கு விரைவில் மாற்றப்படும் என்றும் கூறினார். மேலும், நொய்டாவில் சாம்சங் ஐ.டி. நிறுவனம் தன்னுடைய வர்த்தகத்தை விரிவாக்கவும் திட்டமிட்டுள்ளது.
இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில், ரூ.5,000 கோடி மதிப்பில் ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் நிறுவனத்துடன் உ.பி. அரசு செய்துள்ள ஒப்பந்தமும், அமிட்டி குழுமம் ரூ.2,000 கோடி செலவில் கிரேட்டர் நொய்டாவில் உருவாக்கப்படவுள்ள மருத்துவப் பல்கலைக்கழகத்திற்கான திட்டமும் அடங்கும்.
கிரேட்டர் நொய்டா, லக்னோ மற்றும் கான்பூர் ஆகிய நகரங்களில் ரூ.800 கோடி முதலீட்டில் 250 படுக்கைகளைக் கொண்ட சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகளைத் திறக்க ஃபோர்ட்டிஸ் குழுமம் திட்டமிட்டுள்ளது.
மேலும், 'வாயு மித்ரா' என்ற ஏர் டாக்ஸி சேவைகளை நொய்டாவில் தொடங்க ரூ.330 கோடியை ரிவர் என்ஜினியரிங் என்ற தனியார் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
அதேபோல், இங்கிலாந்தைச் சேர்ந்த அல்ட்ரா குழுமம் நொய்டாவில் ரூ.220 கோடி மதிப்பிலான 'பாட் டாக்ஸி' திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளது. இத்திட்டத்தின் மூலம் நொய்டா மெட்ரோ ரயில் நிலையத்துடன் அந்நகரில் உள்ள அனைத்து மால்களும் இணைக்கப்படும். இதற்கான அரசு அனுமதி ஒன்றரை ஆண்டுகளில் கிடைக்கும் என்று தெரிகிறது.