டெல்லி: 2013ஆம் நிதியாண்டின் துவக்கம் முதல் இந்தியாவின் அனைத்து பொதுத்துறை வங்கிகளும் தங்களது கிளைகளில், கட்டயமாக ஏடிஎம் இயந்திரத்தை அமைக்க திட்டமிட்டது. இதனை தொடர்ந்து இந்தியாவில் இருக்கும் 34,668 வங்கி கிளைகளில் அமைக்கும் பணி துவங்கிய வங்கி நிர்வாகங்கள் இன்னும் 9,300 வங்கி கிளைகளில் ஏடிஎம் இயந்திரத்தை அமைக்கவில்லை.
இந்திய இலக்கை தவற விட்ட வங்கிகளில் எஸ்.பி.ஐ, பஞ்சாப் நேஷ்னல் வங்கி என மொத்தம் 18 வங்கிகள் உள்ளது. நாட்டில் பண புழக்கத்தை அதிகரிக்க அனைத்து வங்கி கிளைகளிலும் ஏடிஎம் அமைக்க வேண்டும் என ரிசர்வ் வங்கியும் நிதியமைச்சகமும், பொது துறை வங்கிகளிடம் அறிவித்து இருந்தது.
இலக்கு
மத்திய நிதியமைச்சகத்தின் தகவல் படி மார்ச் 2014ஆம் ஆண்டின் முடிவில் பொது துறை வங்கிகள் சுமார் 25,331 ஏடிஎம்களை அமைத்துள்ள நிலையில் 9,337 வங்கிக் கிளைகளில் ஏடிஎம் அமைக்கவில்லை எனவும் இந்த அறிக்கை தெரிவிக்கிறது.
வங்கி அமைப்பு
கடந்த 5 வருடங்களில் நிதியமைச்சகம், பொது துறை வங்கி அமைப்புகளில் செய்த சில முக்கிய மாற்றங்களில், அனைத்து வங்கி கிளைகளும் ஏடிஎம் அமைக்கும் பணி அதிமுக்கியமானது. இத்தகைய முக்கிய பணியை முடிக்க முடியாத நிலையில் வங்கிகள் உள்ளன.
பட்ஜெட்
மேலும் முன்னாள் நிதியமைச்சரான சிதம்பரம் அவர்கள் 2013-14ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை அறிவிக்கும் போதும் இந்தியாவின் அனைத்து வங்கி கிளைகளிலும் ஏடிஎம் இயந்திரத்தை கட்டாயமாக அமைக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
வங்கிகள்
நிதி அமைச்சகத்தின் தகவல் படி மார்ச் 2014ஆம் ஆண்டின் முடிவில் அலகாபாத் வங்கி 1,950 ஏடிஎம்களும், சென்ரல் பாங்க் ஆஃப் இந்தியா வங்கி 1,620 ஏடிஎம்களும், சிண்டிகேட் வங்கி 1,085 ஏடிஎம்களும், பாங்க் ஆஃப் இந்தியா வங்கி 744 ஏடிஎம்களும், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (எஸ்பிஐ) 696 ஏடிஎம்களும், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி 553 ஏடிஎம்கள் மற்றும் பஞ்சாப் நேஷனல் வங்கி 499 ஏடிஎம்கள் அமைக்க வேண்டி உள்ளது.
இலக்கை சமாளித்த வங்கிகள்
இதில் பாங்க் ஆஃப் பரோடா, பாங்க் ஆஃப் மகாராஷ்டிரா, கனரா வங்கி, ஐடிபிஐ வங்கி மற்றும் ஸ்டேட் வங்கியின் நான்கு நிறுவனங்கள் தங்களது இலக்கை எட்டிய நிலையில் உள்ளது.
மொத்த ஏடிஎம்கள்
இந்தியாவில் தனியார் மற்றும் பொது துறை வங்கிகளின் மொத்தம் 1.4 இலட்சம் ஏடிஎம்கள் உள்ளது.