டெல்லி: இந்திய தொலைதொடர்பு துறையில் பல வருடங்களாக செயல்பட்டு வரும் பொதுத் துறை தொலைத் தொடர்பு நிறுவனங்களான பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் ஆகியவற்றின் செயல்பாடுகளை உக்குவிக்க மத்திய தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் நேரடியாகவே கவனிக்க உள்ளார்.
இதற்காக, அந்த நிறுவனங்களின் டவர்கள் அனைத்தையும் இணைத்து ஒரு நெட்வொர்க் அமைப்பு அவருடைய அலுவலகத்தில் நிறுவப்பட்டுள்ளது.
இதையடுத்து, ஏற்கனவே இந்தியாவில் குறைந்த விலையில் சிறப்பான சேவைகளை வழங்கிக் கொண்டிருக்கும் இந்த இரு நிறுவனங்களும், இன்னும் சிறப்பாகச் செயல்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அடிப்படை வசதிகளுக்கு அரசு உதவி
"இந்த இரு சேவை நிறுவனங்களின் வளர்ச்சி மிகவும் இன்றியமையாதது. அவற்றின் அடிப்படை கட்டமைப்பு வசதிகளைப் பெருக்கித் தருவது மத்திய அரசின் கடமை. அவற்றின் வளர்ச்சிக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் அரசு செய்து தரும்" என்று அமைச்சர் தெரிவித்தார்.
மொபைல் நெட்வொர்க் மாற்றும் வசதி
அதேபோல் மொபைல் எண்களை வேறு மொபைல் நெட்வொர்க்குக்கு மாற்றும் வசதி விரைவில் முழுவீச்சில் அமல்படுத்தப்படும் என்றும் பிரசாத் கூறியுள்ளார்.
க்ரீன்ஃபீல்டு எலெக்ட்ரானிக் நகரங்கள்
காஸியாபாத், வதோதாரா, தானே, நாசிக், அவுரங்காபாத் உள்ளிட்ட 8 நகரங்களில் க்ரீன்ஃபீல்டு எலெக்ட்ரானிக் தயாரிப்புகளை அறிமுகப்படுத்தும் நிறுவனங்களுக்கு மத்திய அரசின் மானியங்கள் கிடைக்கும் என்றும் அமைச்சர் பிரசாத் கூறியுள்ளார்.
ப்ரவுன்ஃபீல்டு எலெக்ட்ரானிக் நகரங்கள்
அதேபோல் போபால், ஹைதராபாத், பிவாடி, ஜபல்பூர், ஓசூர் உள்ளிட்ட நகரங்களில் ப்ரவுன்ஃபீல்டு எலெக்ட்ரானிக் தயாரிப்பு நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் அரசின் சொதப்பல்
முந்தைய காங்கிரஸ் அரசே எலெக்ட்ரானிக் நகரங்களை அமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டது. ஆனால் அந்த அரசின் நிர்வாகத்துக்குள்ளே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக இந்த அருமையான திட்டங்கள் வழக்கம் போல் கிடப்பில் போடப்பட்டது.