ஹைதெராபாத்: மத்திய அரசு உதவியுடன் ஆந்திர மாநிலத்தில் உயர் தர கல்வி நிறுவனங்களான ஐஐடி (IIT), ஐஐஎம் (IIM), ஏஐஐஎம்எஸ் (AIIMS) மற்றும் பல்கலைக்கழகங்கள் ஆகியவை தொடங்கப்பட உள்ளதாக ஆந்திராவின் மனிதவள மேம்பாட்டு அமைச்சர் காந்த ஸ்ரீனிவாச ராவ் கூறினார்.
ஆந்திர தலைமை செயலகத்தில் இன்று காலை பதவி ஏற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய ராவ், இது குறித்து முதல்வர் சந்திரபாபு நாயுடுவுடன் நடந்த சந்திப்பில் முடிவு எடுக்கப்பட்டதாகவும், இந்த நிறுவனங்களுக்கான கட்டமைப்பு வசதிகள் தயாராக உள்ளதாகவும் தெரிவித்தார்.
மாநில பங்கீடு
ஆந்திர பிரதேசம் மாநிலத்தில் இருந்து தெலுங்கான தனி மாநிலமாக பிரித்ததை தொடர்ந்து, அடுத்த 5 முதல் 10 ஆண்டுக்குள் ஆந்திராவை தெலுங்கான மாநிலத்தை காட்டிலும் சிறப்பான மாநிலமாக உருவாக ஆந்திர அமைச்சரவை முடிவு செய்துள்ளது. இதற்காக அனைத்து விதமான உதவிகளும் மத்திய அரசிடம் இருந்து கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இடவசதிகள்
இக்கல்லுரிகள் திறக்க திருப்பதி, கிருஷ்ணா-குண்டூர் மற்றும் விசாகப்பட்டினம் ஆகிய பகுதிகளில் இதற்கான நிலங்களைத் தேடும் பணியை ஆந்திர அரசு முடுக்கி விட்டுள்ளது.
ஒவ்வொன்றும் 1,000 ஏக்கரில்...
ஏற்கனவே தயாராக உள்ள கட்டமைப்பு வசதிகளைக் கொண்டு மேற்கண்ட பகுதிகளில் ஐஐடி, ஐஐஎம், ஏஐஐஎம்எஸ், என்ஐடி (NIT), ஐஐஐடி (IIIT), மத்தியப் பல்கலைக்கழகம், டிரைபல் பல்கலைக்கழகம், விவசாயப் பல்கலைக்கழகம் ஆகியவை இந்தப் பகுதிகளில் தொடங்கப்படும். முதற்கட்டமாக, ஒவ்வொரு பகுதியிலும் 1000 ஏக்கர் நிலம் ஒதுக்கப்படும் என்றும், பின்னர் ஒவ்வொன்றும் 2000 ஏக்கராக அதிகரிக்கப்படும் என்றும் ராவ் கூறினார்.
விசாகப்பட்டினம்
துறைமுக நகரான விசாகப்பட்டினத்தில் ஐஐஎம், ஐஐஐடி, டிரைபல் பல்கலைக்கழகம் மற்றும் பெட்ரோலியம் தொடர்பான கல்வி நிறுவனம் ஆகியவை வர உள்ளன.
கிருஷ்ணா-குண்டூர்
கிருஷ்ணா-குண்டூர் பகுதியில் ஏஐஐஎம்எஸ், என்ஐடி, என்ஐடிஎம் (NIDM) மற்றும் விவசாயப் பல்கலைக்கழகம் ஆகியவை நிறுவப்பட உள்ளன.
திருப்பதி
திருப்பதியில் மத்தியப் பல்கலைக்கழகம், ஐஐஎஸ்சிஆர் (IISCR) மற்றும் ஐஐடி ஆகிய கல்விநிறுவனங்கள் தொடங்கப்பட உள்ளன.
தொழிற்நுட்ப பூங்கா
மேலும் ஆந்திராவில் ஹைதெராபாத் போலவே ஒரு தகவல் தொழிற்நுட்ப பூங்கா அமைக்கவும் சந்திரபாபு நாயுடுவுடன் சில முக்கிய நிறுவனங்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார். இதில் சத்ய நாதெல்லா தலைமை வகிக்கும் மைக்ரோசாப்ட் நிறுவனமும் ஒன்று.