டெல்லி: ஷாப்பிங் என்றால் 10 கடைகள் ஏறி இறங்கி ஒரு கைகுட்டை வாங்கும் காலம் போய் உட்கார்ந்த இடத்திலேயே ஆன்லைன் மூலம் ஷாப்பிங் செய்யும் காலத்தில் உள்ளோம். இந்தியாவில் பூதாகரமாக வளர்ந்துள்ள தொழிற்நுட்ப வளர்ச்சியின் காரமான ஆன்லைன் வர்த்தக சந்தை கோடை காலத்தில் சுமார் 155 சதவீதம் வளர்ந்துள்ளது.
மேலும் இந்தியாவின் ஆன்லைன் சில்லைறை வர்த்தக சந்தையில் பல நிறுவனங்கள் இறங்கியுள்ள நிலையில் போட்டி அதிகரித்துள்ளது. இதனால் அனைத்து நிறுவனங்கள் தங்களது விற்பனையை பெருக்கவும், வாடிக்கையாளர் எண்ணிக்கை அதிகரிக்கவும் அதிரடி சலுகைகளை அள்ளி வீசி வருகின்றனர்.
ஆய்வு
சென்னை, பெங்களூர், டெல்லி, மும்பை ஆகிய இந்தியாவின் முக்கிய நகரங்களில் 3,500 வர்த்தகர்கள் மத்தியில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. ஆன்லைன் மூலமான வர்த்தகம் இந்த கோடைக்காலத்தில் 155 சதவீதம் அதிகரித்துள்ளதாக அசோசேம் செயலர் ஜெனரல் டி.எஸ். ரவாத் தெரிவித்தார்.
இண்டர்நெட் டிராப்பிக்
மேலும் இக்கோடைக் காலத்தில் ஃபிளிப்கார்ட், அமேசான் ஆகிய நிறுவனங்களின் ஆன்லைன் டிராப்பிக் உச்சத்தை தொட்டதாகவும் இந்நிறுவனங்கள் தெரிவித்துள்ளது.
கோடை காலம்
மேலும் இந்த வருடம் கோடை வெயில் இத்தகைய நிறுவனங்களுக்கு மிகவும் சாதமாக அமைந்தது. வெளியின் தாக்கம் தாங்க முடியாமல் மக்கள் ஆன்லைன் ஷாப்பிங்கை தேர்ந்தெடுத்துள்ளனர்.
வாடிக்கையாளர் விருப்பம்
இதுமட்டும் அல்லாமல் அதிகரித்து வரும் எரிபொருள் விலை, ஆன்லைன் வர்த்தகத்தில் அளிக்கப்படும் தள்ளுபடி சலுகைகள், தேர்வு செய்வதற்கு அதிக எண்ணிக்கையிலான பொருள்கள் ஆகியன வாடிக்கையாளர்களை ஆன்லைன் மூலமாக பொருள்களை தேர்வு செய்ய தூண்டியுள்ளன.