டெல்லி: மத்தியில் ஆட்சி மாற்றங்கள் ஏற்படும் போதெல்லாம் கட்சி கொள்கைகளுக்கு ஏற்றவாறு முக்கியத்துமும் மாறுபடும். பொதுத் தேர்தலுக்குப் பின் உடனடியாகத் தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டில், பிரம்மாண்டமாகக் காட்டிக் கொள்வதற்கான பெரிய பெரிய அறிவிப்புக்கள் தான் பிரதானமாக இருக்கும். நாட்டுக்கு என்ன தேவை, எந்த அளவுக்குத் தேவை என்பதெல்லாம் அடுத்துதான். இதற்குக் காரணம், தேர்தல் முடிவுகளுக்கும் இந்த இடைக்கால பட்ஜெட்டுக்கும் இடையிலான கால அளவு மிகவும் குறைவு.
கடந்த மே 16ல் தேர்தல் முடிவுகள் வெளியான போதிலும், பிரதமராக நரேந்திர மோடி பதவி ஏற்றுக் கொள்ள 10 நாட்கள் பிடித்தன. ஏனென்றால், அவர் ஏற்கனவே வகித்து வந்த குஜராத் முதல்வர் பதவியை வேறொருவரிடம் முறைப்படி ஒப்படைத்துவிட்டு வர வேண்டுமே! மத்தியில் புதிய அமைச்சரவை பதவி ஏற்றுக் கொள்வதற்கும் மேலும் சில நாட்கள் பிடித்தன. அந்த அமைச்சர்களும் அந்தந்த துறைகளில் 'செட்' ஆவதற்கும் இப்போதுதான் முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள்.
முக்கிய துறைகள்
இதனால் பல துறைகளின் முக்கிய அமைச்சர்கள் தங்களின் திட்ட ஒப்பதல் பெறவும், நிதிநிலையை தெரிந்து கொள்ளவும் நிதியமைச்சரை தொடர்ந்து சந்தித்து வருகின்றனர். இந்த குறைந்த காலக்கட்டத்தில் சிறப்பான பட்ஜெட் அமைப்பது கடினமான காரியம். இத்தகைய சூழ்நிலையில் அனைத்து கட்சிகளும் பழயை பட்ஜெட்யை மையமாக கொண்டு புதிய பட்ஜெடை தயாரிப்பது வழக்கம்.
ப.சிதம்பரத்தின் இடைகால பட்ஜெட்
இந்நிலையில் கடந்த பிப்ரவரியில் முன்னாள் நிதி அமைச்சர் ப. சிதம்பரம் தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டுக்கும், வரும் ஜூலை 10ம் தேதி தற்போதைய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தாக்கல் செய்யவுள்ள இடைக்கால பட்ஜெட்டுக்கும் அவ்வளவு பெரிய வித்தியாசம் இருக்காது என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
12 அம்சங்கள்
முந்தைய இடைக்கால பட்ஜெட்டில் உள்ள அறிவிப்புகளை சின்னச் சின்ன மாற்றங்களுடன் அப்படியே இறக்குவதற்கு ஜேட்லி தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது. ஜூலை 10 இடைக்கால பட்ஜெட்டில் பின்வரும் 12 அம்சங்கள் தான் முக்கியமாக இடம் பெற்றிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது:
1. வரி விலக்கு வரம்பு
பணவீக்கம் அதிகரித்திருப்பதால், வருமான வரி விலக்கிறகான குறைந்தபட்ச வரம்பில் (தற்போது ரூ.2 லட்சம்) சிறிது மாற்றங்கள் இருக்கலாம்.
2. சேமிப்பு
சேமிப்பை ஊக்கப்படுத்தும் வகையில் 80C பிரிவிலான சேமிப்பு வரம்பில் சில மாற்றங்கள் அறிவிக்கப்படலாம்.
3. தொழில் வரி
தொழில் தொடங்குவதற்கான முதலீட்டில் சில சிறப்பு வரிச் சலுகைகளை எதிர்பார்க்கலாம்.
4. மாநில அந்தஸ்து
மத்திய அரசின் கட்டுப்பாட்டிலுள்ள சில திட்டங்கள் மற்றும் நிறுவனங்கள் மாநில அரசுகளுக்கு மாற்றப்படலாம்.
5. பற்றாக்குறை
கடந்த பட்ஜெட்டில் சிதம்பரம் அறிவித்த நிதிப் பற்றாக்குறை அப்படியே இப்போதும் அறிவிக்கப்படலாம். இதனால் அதன் தாக்கம் ஓரளவு தணியும்.
6. அந்நிய முதலீடு
தற்போதைய மார்க்கெட் நிலவரம் அட்டகாசமாக இருப்பதால், அந்நிய முதலீடுகளை அதிகரிப்பதற்கான அறிவிப்புகள் வரலாம்.
7. மறைமுக வரிகள்
கலால் மற்றும் சுங்க வணிகத் துறைகளுக்கான மறைமுக வரிகளில் ஒரு சில மாற்றங்களுக்கு உட்படும்.
8. ஜி.எஸ்.டி. இறுதி நாள்
ஜி.எஸ்.டி. எனப்படும் பொருள்கள் மற்றும் சேவைகள் வரியை அமல்படுத்துவதற்கான கடைசித் தேதி 2015 மத்தியில் அல்லது 01-ஏப்ரல்-2016க்குத் தள்ளி வைக்கப்படலாம்.
9. நேர்முக வரி குறியீட்டெண்
வருகிற 01-ஏப்ரல்-2015 முதல் புதிய நேர்முக வரிகளுக்கான குறியீட்டெண் (Direct Taxes Code) குறித்த அறிவிப்பு வெளியாகலாம்.
10. மோடியின் கனவுத் திட்டங்கள்
ஊரக வீடுகள், சாலைகள், கழிவறைகள் உள்ளிட்ட பிரதமர் மோடியின் கனவுத் திட்டங்கள் குறித்த அறிவிப்புகள் அனைத்தையும் எதிர்பார்க்கலாம். கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட துறைகளுக்கு அதிக ஒதுக்கீடு குறித்த அறிவிப்பும் வெளியாகலாம்.
11. திட்டக் கமிஷன்
திட்டக் கமிஷன் மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்த பெரிய அளவிலான அறிவிப்புகள் இந்த இடைக்கால பட்ஜெட்டில் இடம் பெறலாம். முக்கியமாக, 12வது திட்டக் கமிஷன் திட்டங்கள் அப்படியே ஆண்டுத் திட்டங்களுக்கு இடம் பெயரலாம்.
12. லேண்ட் பில்கள்
NREGA மற்றும் Land Bills ஆகியவற்றில் சில மாற்றங்கள் செய்யப்படலாம்.