சென்னை: கடையெழு வள்ளல்களை உலகிற்கு காட்டியும், மகாபாரத கர்ணனைக் காட்டியும் கொடை வள்ளல் திறனுக்கு உதாரணம் சொல்வார்கள். சோழர் வம்சத்தின் சிபிச் சோழச் சக்ரவர்த்தி தன்னுடைய உடலையே தானமாக கொடுத்து அழியாப் புகழ் பெற்று விளங்குகிறார்.
இந்த வரிசையில், கோடிஸ்வரர்களில் பலரும் தங்களிடம் கொட்டிக் கிடக்கும் செல்வத்தை மக்களின் நலனுக்காக செலவிட்டு, மனிதர்கள் மேல் தாங்கள் கொண்டுள்ள அன்பை வெளியே காட்டியிருக்கிறார்கள்.
சில இந்திய கோடீஸ்வரர்கள் கூட தங்களுடைய சொத்தில் பெரும் பகுதியை கொடுத்து கொடையாளர்களாகத் திகழ்ந்திருக்கிறார்கள். இந்த கட்டுரையில் சில கோடீஸ்வரக் குடும்பங்களைப் பற்றியும், அவர்கள் தங்களுடைய சொத்துக்களை எந்த வகையில் செலவிட்டு இந்த பூமிக்கு கைம்மாறு செய்திருக்கிறார்கள் என்பதையும் தெரிந்து கொள்வோம்.
அசிம் பிரேம்ஜி, விப்ரோ
மாபெரும் தொழிலதிபர்களான வாரன் பப்ஃபெட் மற்றும் பில் கேட்ஸ் ஆகியேரின் கிவ்விங் பிளெட்ஜ் (Giving Pledge) பிரச்சாரத்தில் கையெழுத்திட்ட முதல் இந்தியராக விப்ரோவின் நிறுவனர் திரு.அஸிம் பிரேம்ஜி உள்ளார். கிராமப்புற இந்தியாவின் கல்வி மற்றும் பிற சமூக வளர்ச்சிப் பணிகளுக்காக சுமார் 8,000 கோடிகளை கொட்டிக் கொடுத்திருக்கிறார் அசிம் பிரேம்ஜி. இவர் தன்னுடைய செல்வத்தில் 25 சதவீதத்திற்கும் மேலாக கொடையாக கொடுத்திருக்கிறார்.
நந்தன் எம்.நீலகேணி,
தொழிலதிபர், அரசியல்வாதி, இன்போசிஸ் நிறுவனத்தை தொடங்கியவர்களில் ஒருவர் மற்றும் இந்திய தனிப்பட்ட அடையாள அட்டை ஆணையத்தின் (Unique Identification Authority of India) தலைவர் என்று பன்முகம் கொண்ட திரு.நந்தனுக்கு கொடை முகம் ஒன்றும் உள்ளது. தன்னுடைய மனைவியான திருமதி.ரோகிணி நீலகேணியுடன் சேர்ந்து சுமார் 13 பில்லியன் டாலர்களை கொடை பணிகளுக்காகக் கொடுத்து, இந்தியாவிலேயே மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ள கொடையாளராக உள்ளார் இவர். இவர் கொடுத்த செல்வம் தண்ணீர் சுத்திகரிப்பு, மழை நீர் சேகரிப்பு மற்றும் ஏழைகளுக்கான தண்ணீரைப் பெறுதல் போன்ற பணிகளுக்காக தரப்படுகிறது.
கிரண் மசூம்தார் ஷா, பையோகான்
பெங்களூருவை மையமாக கொண்ட பையோகான் நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குநராக உள்ள தொழிலதிபராக திரு.கிரண் மசூம்தார் என்ற பெண் தொழிலதிபரும் இந்த பட்டியலில் சேர்ந்துள்ளார். பையோகான் பௌன்டேஷன் என்ற அமைப்பை இவர் துவங்கி, அதன் மூலமாக புற்றுநோய் கவனிப்பு, சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் திட்டங்களை செயல்படுத்துதல் ஆகியவற்றை செய்து அடித்தட்டு மக்களுக்கு நன்மை செய்து வருகிறார். தன்னுடைய வருமானத்தில் 75 சதவீதத்தை சமூக வளர்ச்சிப் பணிகளுக்காக செலவிட, இவர் உறுதியளித்திருக்கிறார்.
மனோஜ் பார்கவா, 5-மணி நேர சக்தி
தொழிலதிபராகவும், கொடையாளராகவும் மற்றும் 5-மணி நேர சக்தி அமைப்பின் தலைமை செயல் அதிகாரியாகவும் இருக்கும் திரு.மனோஜ் பார்கவா, செப்டம்பர் 2012-ல் கிவ்விங் பிளெட்ஜ் அமைப்பில் சேர்ந்தார். பார்கவாவின் பௌன்டேஷன்களில் நாலெட்ஜ் மெடிக்கல் சாரிடபிள் டிரஸ்ட், கிராமப்புற இந்தியாவிற்கான தொண்டு நிறுவனம் மற்றும் தி ஹான்ஸ் பௌன்டேஷன் ஆகியவை உள்ளன. இவருடைய செல்வத்தில் 45 சதவீதத்தை கிராமப்புற இந்தியாவின் வளர்ச்சிக்காக கொடுத்திருக்கிறார்.
ரத்தன் டாடா, டாடா குழுமம்
இந்தியாவின் தொழிலதிபராகவும், மல்டி-பில்லியன் டாலர் குழுமமான டாடா குழுமத்தின் முன்னாள் தலைவராகவும் இருந்த, திரு.ரத்தன் டாடா, ஜே.ஆர்.டி டாடா டிரஸ்ட் மற்றும் சர்.ரத்தன் டாடா டிரஸ்ட் ஆகிய தொண்டு நிறுவனங்கள் வழியாக சுமார் 310 கோடிகளை வளர்ச்சிப் பணிகளுக்காக கொடுத்திருக்கிறார். டாடா தொண்டு நிறுவனங்கள் டாடா சன்ஸ் நிறுவனத்தின் 66 சதவீத பங்குகளை கட்டுப்படுத்துகின்றன. இதன் செல்வம் கொடை மற்றும் பிற நிறுவனங்களுக்கான சேவையாக உள்ளது.
பில் கேட்ஸ் மற்றும் மெலிண்டா பில் கேட்ஸ்
பில் கேட்ஸ் மற்றும் மெலிண்டா பில் கேட்ஸ் ஆகிய இருவரும் சேர்ந்து உலகின் மிகப்பெரிய தனியார் தொண்டு நிறுவனமான பில் & மெலிண்டா கேட்ஸ் பௌன்டேஷனை, 2000-வது ஆண்டில் தொடங்கினார்கள். சுகாதாரத்தை மேம்படுத்துதல் மற்றும் வறுமையை குறைத்தல், கல்விக்கான வாய்ப்புகளை விரிவுபடுத்துதல் மற்றும் தகவல் தொழில்நுட்பத்தை அடையச் செய்தல் ஆகியவையே இந்த பௌன்டேஷனின் முக்கியமான குறிக்கோள்களாகும். இவர்கள் சுமார் 28 பில்லியன் டாலர்களை இந்த பௌன்டேஷனுக்காக கொடுத்துள்ளார்கள்.
மார்க் ஸுக்கர்பெர்க், பேஸ்புக்
பேஸ்புக்-ன் தலைமை செயல் அதிகாரியான திரு.மார்க் ஸுக்கர்பெர்க், தன்னுடைய செல்வத்தில் பாதியை அல்லது அதற்கும் மேலான அளவை தன்னுடைய வாழ்நாளில் அல்லது சாகும் வரை கொடுப்பதாக சொல்லி கிவ்விங் பிளெட்ஜ்-ல் கையெழுத்திட்டுள்ளார். இந்த உறுதிமொழியை அடையும் நோக்கில் அடுத்த நடவடிக்கையையும் அவர் எடுத்துள்ளார். இவரும், இவருடைய மனைவியான திருமதி.பிரிஸில்லா சானும் சேர்ந்து, பேஸ்புக் நிறுவனத்தின் 18 சதவீத பங்குகளை சிலிகான் வேலி கம்யூனிட்டி பௌன்டேஷன் என்ற அமைப்புக்கு கொடையாக கொடுத்துள்ளனர்.
வாரன் பப்ஃபெட், பெர்க்ஷையர் ஹட்டாவே
அமெரிக்க தொழிலதிபர், முதலீட்டாளர் மற்றும் கொடையாளராகவும், பெர்க்ஷையர் ஹட்டாவேயின் மிகப்பெரிய பங்குதாரர், தலைவர், தலைமை செயல் அதிகாரியாகவும், உலகின் செல்வ வளம் மிக்க மனிதர்களின் ஒருவராகவும் இருக்கும் திரு.வாரன் பப்ஃபெட் கிவ்விங் பிளெட்ஜ் அமைப்பின் இணை-நிறுவனர் ஆவார். இவர் தன்னுடைய செல்வ வளத்தில் 99 சதவீதத்தை கொடை மற்றும் சமூகப்பணிகளுக்காக கேட்ஸ் பௌன்டேஷனுக்கு கொடுத்துள்ளார்.
மைக்கேல் ப்ளூம்பெர்க், ப்ளூம்பெர்க்
ப்ளூம்பெர்க் L.P-ன் நிறுவனரான திரு.மைக்கேல் ப்ளூம்பெர்க் அரசியல்வாதியாகவும், கொடையாளராகவும் உள்ளார். இவர் நியூயார்க் நகரத்தின் 108-வது மேயராக பொறுப்பு வகித்திருந்தார். 2.4 பில்லியன் டாலர்களைக் கொடையாகக் கொடுத்ததால், உலகின் முதல் ஐந்து பெரிய கொடையாளர்களில் ஒருவராக உள்ளார். உலகம் முழுவதும் நடக்கக் கூடிய புகையிலை-எதிர்ப்பு முயற்சிகளுக்கும், சுத்தமான காற்றுக்கான திட்டங்களுக்கும், கல்வி, அரசாங்கத்தின் வளர்ச்சி மற்றும் கலைகளுக்கும் ஆதரவு தெரிவிப்பவராக உள்ளார் இவர்.
பால் அல்லன், வல்கன்
மைக்ரோசாப்ட் கார்ப்பரேஷனின் இணை-நிறுவனர், முதலீட்டாளர், கொடையாளர், வல்கன் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிறுவனர் என்று பன்முகம் கொண்டவரான பால் அல்லன் பல்வேறு வகையான சமூக வளர்ச்சிப் பணிகளை செய்து வருகிறார். இவர் சுமார் 500 மில்லியன் டாலர்களை தன்னுடைய பால் அல்லன் இன்ஸ்டியூட் ஆஃப் பிரைன் சயின்ஸ்-க்கு கொடுத்துள்ளார். இந்த நிறுவனம் மனித மூளையின் செயல்பாடுகளைத் தெரிந்து கொண்டு, மருத்துவம் மற்றும் நோய்களை கட்டுப்படுத்த முயற்சி செய்து வருகிறது.