டெல்லி: கப்பலிலிருந்து பாயக்கூடிய ஹார்ப்பூன் ஏவுகணைகளை இந்தியாவுக்கு விற்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது இதன் மதிப்பு 200 மில்லியன் டாலர்கள். இது தொடர்பான அறிவிப்பை அமெரிக்காவின் பாதுகாப்பு அமைப்பான பெண்டகன், அந்நாட்டு நாடாளுமன்றத்தில் அறிவித்தது. இந்தியாவுடனான நல்லுறவை அதிகரிக்கவும், இந்தியப் பாதுகாப்பை அதிகரிக்கவும் இது உதவும் என்றும் பெண்டகன் வாதாடியுள்ளது.
மேலும் ஏவுகணைகளை வாங்குவதில் இந்தியாவுக்கும் எந்த சிரமமும் இல்லை என்றும் பெண்டகன் கூறியுள்ளது.
ஹார்ப்பூன்கள்
ஏற்கனவே இந்திய விமானப் படையின் ஜாகுவார் விமானங்களிலும், பி-81 மாரிடைம் கடலோரக் கடற்படை விமானங்களிலும் பயன்படுத்துவதற்காக ஹார்ப்பூன் ஏவுகணைகள் அமெரிக்காவிடமிருந்து வாங்கப்பட்டுள்ளன.
தற்போது வாங்கும் ஹார்ப்பூன்கள்
தற்போது இந்தியக் கடற்படைக்காக 200 மில்லியன் டாலர்கள் மதிப்பிலான ஹார்ப்பூன் ஏவுகணைகளை அமெரிக்கா விற்கவுள்ளது. இதில் ஒரு டஜனுக்கும் மேற்பட்ட UGM-84 ஹார்ப்பூன் ப்ளாக் 2 என்காப்சுலேட்டட் ஏவுகணைகள், 10 UTM-84L ஹார்ப்பூன் என்காப்சுலேட்டட் பயிற்சி ஏவுகணைகள், மற்றும் 2 என்காப்சுலேட்டட் ஹார்ப்பூன் சர்டிஃபிகேசன் பயிற்சி வாகனங்களும் அடங்கும்.
ஷிஷுமார் நீர்மூழ்கியில்...
இந்த ஏவுகணைகள் இந்தியக் கடற்படையின் ஷிஷுமார் நீர்மூழ்கிக் கப்பல்களில் பொருத்தப்படும். மேலும் இந்தியக் கடலோரப் பாதுகாப்பு சம்பந்தமான தகவல் தொடர்புகளை மேம்படுத்தவும் பயன்படுத்தப்படும்.
போயிங் தயாரிப்பு
இந்த ஹார்ப்பூன் ஏவுகணைகளை போயிங் நிறுவனம் தயார் செய்யவுள்ளது.
ஒப்பந்தம்
இந்த விற்பனை தொடர்பான எந்த ஒப்பந்தமும் இன்னும் செய்யப்படவில்லை. இந்தியப் பாதுகாப்பு கொள்முதல் கொள்கை அடிப்படையில் இது தொடர்பான ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும் என்று பெண்டகன் தெரிவித்துள்ளது.