சென்னை: தமிழ்ப் புத்தக விரும்பிகளுக்கு ஒரு புதிய முகவரி கிடைத்துள்ளது. 8,000க்கும் அதிகமான தமிழ்ப் புத்தகங்களை அமேசான் ஆன்லைன் 'புத்தகக் கடை'யில் அவர்களால் வாங்க முடியும்.
இந்த பிரம்மாண்டமான ஆன்லைன் 'புத்தகக் கடை'யை அமேசான் நிறுவனம் கடந்த வாரம் திறந்து வைத்தது. இது தொடர்பான பல விளம்பரங்கள் ஏற்கனவே பத்திரிகைகளிலும், தொலைக் காட்சிகளிலும் வந்து கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் அமேசான் இந்தியா இயக்குநர் சமிர் குமார் கூறியுள்ளதாவது:
8,000க்கும் அதிக தலைப்புகள்
இங்கு 8,000க்கும் மேற்பட்ட தலைப்புகளில் தமிழ்ப் புத்தகங்கள் கிடைக்கும். இந்தியாவிலேயே ஆன்லைனில் இவ்வளவு அதிகமான தலைப்புகளில் அமைந்த தமிழ்ப் புத்தகங்கள் அமேசானில் மட்டுமே கிடைக்கும்.
புக் செய்த மறுநாளே...
1,500க்கும் அதிகமான பிரபல தலைப்புகளில் அமைந்த புத்தகங்கள், பதிவு செய்த மறுநாளே இந்தியா முழுவதிலும் சென்னை உள்ளிட்ட 20 நகரங்களில் எளிதாகக் கிடைக்கவும் அமேசான் நிறுவனம் வழி செய்துள்ளது.
பல்துறைப் புத்தகங்கள்
இலக்கியம், நாவல், சுயசரிதை, வணிகம், நிதி, சுய உதவி, சமையல், குழந்தைகளுக்கான புத்தகங்கள் உள்ளிட்ட பல்துறைப் புத்தகங்களும் இந்த ஆன்லைன் 'புத்தகக் கடை'யில் கிடைக்கும்.
பிரபலர்களின் புத்தகங்கள்
பிரபல எழுத்தாளர்களான கல்கி, சுஜாதா, கண்ணதாசன், பாலகுமாரன், சாண்டில்யன், இந்திரா சவுந்திரராஜன், மதன், வைரமுத்து, ஜெயமோகன், ஜெயகாந்தன் உள்ளிட்டோரின் புத்தகங்களையும் இங்கு வாங்கிக் கொள்ளலாம்.
மொழியாக்கப் புத்தகங்கள்
மேலும், ஆங்கிலத்திலிருந்து மொழியாக்கம் செய்யப்பட்ட புத்தகங்கள் கிடைக்கவும் அமேசான் ஏற்பாடு செய்துள்ளது. தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, உருது மொழிகளில் திறனை வளர்த்துக் கொள்வதற்கான மொழிப் புத்தகங்களையும் ஆன்லைனில் அமேசான் விற்கிறது.