டெல்லி: மத்திய அரசிற்கு நேரடி வரிகள் மற்றும் மறைமுக வரிகளிலிருந்து தான் அதிகப்படியான வருமானம் கிடைத்து வருகிறது. இதில் நேரடி வரி என்பது மக்களிடமிருந்தும், நிறுவனங்களிடமிருந்தும் நேரடியாக வசூல் செய்யப்படும் வரிகளாகும். மறைமுக வரிகள் என்பவை பொருட்கள் மற்றும் சேவைகள் மீது விதிக்கப்படும் பிரத்தியேக வரி கட்டணங்களாகும்.
நடப்பு நிதியாண்டில் மறைமுக வரி மூலமாக ரூ.6.24 இலட்சம் கோடி வசூல் செய்ய வேண்டும் என்ற இலக்கை நிர்ணயிக்கப்பட்டு மத்திய அரசு செயல்பட்டு வருகிறது, ஆனால் இந்த இலைக்கை அடைவது மிகவும் சவாலான காரியமாக இருக்கும் என கூறுகிறார் நிதி அமைச்சகத்தைச் சேர்ந்த ஒரு மூத்த அதிகாரி.
சக்திகாந்தா தாஸ்
'நடப்பு நிதியாண்டின் பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள மறைமுக வரியைப் பெறுவதில் அரசாங்கம் சவால்களைச் சந்திக்கும்' என்கிறார் வருவாய் செயலராக இருக்கும் திரு.சக்திகாந்தா தாஸ் என்பவர்.
20 சதவீதம் அதிகம்
2014-15-ம் ஆண்டில் ரூ.6,24,902 கோடிகளை மறைமுக வரியாக வசூலிக்க வேண்டும் என்று பட்ஜெட்டில் நிர்ணயித்துள்ளது. கடந்த நிதியாண்டின் திருத்தப்பட்ட மதிப்பீடுகளின் படி, மறைமுக வரிகளை ஒன்று சேர்த்தால், இது 20 சதவீதம் அதிகமான அளவாகும்.
நேரடி வரி
நேரடி வரிகளாக ரூ.7,36,221 கோடிகளை வசூலித்திட முடியும் என்ற அரசாங்கம் உறுதியாக நம்புகிறது. இது கடந்த ஆண்டின் திருத்தப்பட்ட மதிப்பீடுகளின் படி, 15 சதவீதம் அதிகமான அளவாகும்.
வரி செலுத்தாத ஆசாமிகள்
நிதியமைச்சகத்தின் இணை செயலர் திரு.சுனில் குப்தா, 'கடந்த ஆண்டில் வருமான வரியை தாக்கல் செய்யாமல் இருந்த 1 இலட்சம் பேருக்கு நாங்கள் கடிதங்கள் அனுப்பினோம். இதன் மூலம் ரூ.6,000 கோடியளவிற்கு வரி வசூலாகி அரசாங்கத்திற்கு கூடுதல் வருமானம் கிடைத்துள்ளது.' என்றார்.
என்ன காரணம்
இந்த கடிதங்களில் பண பரிமாற்றங்கள் குறித்த தகவல்களின் சுருக்கவும், மாற்றியமைக்கப்பட்ட பதில் தாளும் இணைக்கப்பட்டிருக்கும். இதன் மூலம் தொடர்புடைய மனிதர், ஏன் வருமான வரியை தாக்கல் செய்யாமல் இருக்கிறார் என்ற விபரமும் கிடைத்திடும்.
12 இலட்சம் பேர்
நிதியமைச்சகத்தின் கணக்குப் படி, நிரந்தர கணக்கு அட்டைதாரர்களின் (PAN card) 12 இலட்சம் பேர், இதுவரையிலும் தங்களுடைய வருமான வரியை தாக்கல் செய்யவில்லை. இவ்வாறு வரி செலுத்தாதவர்களை கண்டறிந்த பின்னர், நிதித்துறையினர் சுமார் 1 இலட்சத்திற்கும் மேலானவர்களுக்கு கடிதங்களை அனுப்பினார்கள்.