டெல்லி: நம் நாட்டிலும் வெளி நாடுகளிலும் இந்தியர்கள் எவ்வளவு கருப்புப் பணத்தைப் பதுக்கி வைத்துள்ளனர் என்று இன்னும் தெளிவாக தெரியவில்லை என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார். இதற்காக அமைக்கப்பட்டுள்ள ஆய்வுக் குழு இன்னும் தன் கணக்கெடுப்பை முடிக்கவில்லை என்றும் ஜேட்லி மக்களவையில் கூறினார்.
இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:
இன்னும் தெரியவில்லை
இந்தியர்கள் உள் நாட்டிலும் வெளி நாடுகளிலும் எவ்வளவு கணக்கில் வராத பணத்தைப் பதுக்கி வைத்துள்ளனர் என்பது குறித்து இன்னும் சரிவர தெரியவில்லை என்று தெரிவில்லை.
சட்ட நடவடிக்கை
வெளிநாடுகளில் இந்தியர்கள் எவ்வளவு பணத்தைப் பதுக்கி வைத்துள்ளனர் என்பதை அறிவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அது தெரியவரும் போது, அதற்கு வரியும் அபராதமும் விதிக்க வேண்டும் என்பது குறித்தும், அவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்பது குறித்தும் முடிவெடுக்கப்படும்.
நிதி அமைப்புகளின் கணக்கெடுப்பு
இதற்கான கணக்கெடுப்பை NIPFP, NCEAR, மற்றும் NIFM ஆகிய தேசிய நிதி அமைப்புகள் நடத்த, கடந்த மார்ச் 2011ல் முடிவெடுக்கப்பட்டது. அந்தக் கணக்கெடுப்புப் பணி இன்னும் முடியவில்லை.
சிறப்புப் புலனாய்வுக் குழு
கருப்புப் பணம் தொடர்பாக மத்திய அரசு ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.பி. ஷா தலைமையிலான ஒரு சிறப்புப் புலனாய்வுக் குழுவையும் அமைத்துள்ளது. அதுவும் இன்னும் தன் அறிக்கையை சமர்ப்பிக்கவில்லை.
செயல்படாத சொத்துக்கள்
பொதுத் துறை வங்கிகளின் செயல்படாத சொத்துக்களில் ரூ.33,486 கோடி மதிப்பிலானவை கடந்த நிதி ஆண்டில் (2013-14) மீட்கப்பட்டுள்ளன. மீதமுள்ளவற்றையும் மீட்க வங்கிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.