டெல்லி: நடப்பு நிதியாண்டில் வருமான வரி வசூல் இலக்கான ரூ.13.64 இலட்சம் கோடியை எளிதாக எட்டுவோம் என மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார். மேலும் அவர் கடந்த நிதியாண்டில் முந்தைய மத்திய அரசு வரி வசூல் இலக்கை எட்ட தவறவிட்டதையும் சுட்டிக்காட்டினார்.
2014-15ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி வசூல் இலக்கை எட்டுவது மட்டும் அல்லாமல் இலக்கை விட அதிகளவில் வருமானத்தை பெருவோம் எனவும் நிதியமைச்சர் தெரிவித்தார்.
30வது வருடாந்திர கூட்டம்
வருமான வரி துறையின் 30வது வருடாந்திர கூட்டத்தில், வருமான வரித்துறையின் தலைமை ஆணையர்கள், கொள்கை இயக்குனர் ஜெனரல்கள் ஆகியோருடன் கலந்து கொண்டபோது வருமான வரி இலக்கு குறித்து அருண் ஜேட்லி பேசினார்.
வருமான வரித்துறை
இக்கூட்டத்தில் அருண் ஜேட்லி வருமான வரித்துறையின் நம்பகத்தன்மை பற்றி வெகுவாக பாராட்டினார்,"வருமான வரித் துறை வைத்து மிகப்பெரிய சொத்து என்றால் அது நம்பகதன்மை தான், இதனால் தான் இத்துறை அதிகாரிகள் உருவாக்கும் மிகப்பெரிய திட்டங்கள் அனைத்து நாட்டை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்கிறது." என தெரிவித்தார்.
நேரடி மற்றும் மறைமுக வரி
நடப்பு நிதியாண்டில் நேரடி மற்றும் மறைமுக வரியாக சுமார் 13.64 இலட்சம் வரை வசூல் செய்ய இலக்கை வகுத்திருந்தோம்.
இலக்கில் துண்டு விழுந்தது
கடந்த 2013-14ஆம் நிதியாண்டில் ரூ.12.35 கோடி இலக்கை நிர்ணயம் செய்ய முந்தைய மத்திய அரசு ரூ.11.58 கோடி மட்டுமே வசூல் செய்திருந்தது. இதனால் இலக்கில் ரூ.77,000 கோடி துண்டு விழுந்தது.
சிக்கல்
கடந்த வாரம் வருவாய் துறை செயலாளர் சக்திகாந்த தாஸ் நேரடி வரி வசூல் இலக்கை அடைவதில் எந்த ஒரு சிக்கலும் இல்லை, ஆனால் மறைமுக வரி வசூலில் தான் சிக்கல் உள்ளதாக அவர் தெரிவித்தார். வரி வசூலில் உள்ள பிரச்சனைகளை மொத்தமும் களைந்து இலக்கை அடைய அனைவரும் ஒன்று கூடி பாடுபட வேண்டும் எனவும் அருண் ஜேட்லி தெரிவித்தார்.