சென்னை: தமிழ்நாட்டில் தொழில் துவங்க உரிமம் பெறுவதில் உள்ள சிக்கல்களை களையவும், தற்போதுள்ள வழிமுறைகளை எளிதாக்கும் வகையில் இனி இணையதளம் மூலம் பதிவு செய்யும் வகையில் அமைக்கப்படும் என தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இதற்கென தனி இணையதளத்தை வடிவமைக்கும் முயற்சியில் தமிழக அரசு இறங்கியுள்ளது.
இந்த செயல் முறைகளில் உள்ள சிக்கல்களைத் தொடர்ந்து, உரிமங்கள் இனி இணைய தளம் மூலம் பதிவு செய்யப்பட்டு வழங்கப்படும் என்றும் இது குறித்த விவரங்கள், அரசின் சேவைகள் குறித்த விவரங்கள் ஆகிய அனைத்தும் அந்த இணையத்தளத்தில் கிடைக்கும் என்றும் சட்டபேரவையில் வெளியிட்ட அறிக்கையில் தமிழக முதல்வர் தெரிவித்தார்.
2.24 கோடி ரூபாய்
இந்த இணையதளம் தொழிலதிபர்களுக்கும் பொது மக்களுக்கும் அரசின் பல்வேறு திட்டங்களைக் குறித்த தகவல்களைத் தரும் எனவும் இந்தத் திட்டம் சுமார் 2.24 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
42,000 தொழிலகங்கள்
தமிழ்நாட்டில் தொழில் தொடங்க தொழில் சட்டம் 1948 இன் படி தொழில்கள் பதிவு செய்யப்பட்டு உரிமம் பெறவேண்டியது அவசியம். மேலும் சுமார் 42,000 தொழிலகங்கள் இதுவரை இம்மாநிலத்தில் பதிவுசெய்யப்பட்டுள்ளன.
வேலை வாய்ப்பு மையங்கள்
மேலும் நடப்பாண்டில் காஞ்சிபுரம், விழுப்புரம், திருவாரூர், திருவள்ளூர் மற்றும் தருமபுரி ஆகிய ஐந்து மாவட்டங்களில் மாவட்ட வேலை வாய்ப்பு மையங்களையும் அறிவித்துள்ளதோடு அவை தங்களுடைய சுமார் 1.65 கோடி ருபாய் செலவில் கட்டப்பட்ட சொந்த கட்டிடங்களில் இயங்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
வேலை வாய்ப்புகள்
இந்தியாவில் அதிகளவில் அரசு வேலைவாய்ப்பு அளிப்பதில் குஜராத் மாநிலம் கடந்த 10 வருடமாக முதல் இடத்தில் இருந்து வருகிறது. இதை முன்மாதிரியாக எடுத்துக்கொண்டு மற்ற மாநிலங்களும் செயல்பட வேண்டும்.